வாழ்வை புதிதாய் பாருங்கள்!
கடந்த சில தினங்களாய், பூமி பல பெரிய மாற்றங்களுக்கு உள்ளாகி வருகிறது.
கடந்த சில தினங்களாய், பூமி பல பெரிய மாற்றங்களுக்கு உள்ளாகி வருகிறது. இது கொஞ்ச காலம் தொடரும். உத்தராயணம் தொடங்கும் இவ்வேளையில், பூமியும் அதிலுள்ள உயிர்களும் சூரியனுடன் தங்களுக்கு உண்டான தொடர்பில் மாற்றங்களை சந்தித்து வருகின்றன. பனிகாலத்து கதிர்திருப்பம் புதிய தொடக்கமாகவும், புதிய சாத்தியமாகவும் இருக்கிறது. உயிரோட்டத்தை புது தவணையாய் கட்டவிழ்த்துக் கொண்டிருக்கிறது.
வருடத்தின் இந்தக் காலகட்டத்தில், நாம் வசந்தத்தை வரவேற்க காத்திருக்கிறோம். இந்த பூமியும் அதிலுள்ள உயிர்களும் தன் சிறகினை உதிர்ப்பதைப் போல் இந்தக் காலகட்டத்தில் வருடப் பிறப்பு நிகழ்கிறது. குறிப்பாக பூமியின் வடக்கு பாகங்களில், உயிர்கள் அறுவடைக்காகவும், மலர்களுக்காகவும் கனிகளுக்காகவும் தயாராகிக் கொண்டிருக்கின்றன.
புது வருடத்தை வரவேற்க, அற்ப விஷயங்களை செய்ய வேண்டும் என்று பலரும் நினைக்கிறார்கள். அற்பமாய் குடிப்பதும், அற்பமாய் வாகனம் ஓட்டுவதும், அற்பமாய் மடிவதுமாய் இருக்கிறார்கள். ஏதோவொன்று பிரபலமாய் இருக்க அது அற்பமானதாய் இருக்க வேண்டியிருக்கிறது. கொண்டாட்டம் என்பதன் விளக்கத்தை நாம் மாற்றி எழுத வேண்டாமா? ஆழம் பொதிந்த ஒன்றினில் களிக்க வேண்டாமா? புது வருடத்தில், உங்களைவிட பெரிதான ஏதோவொன்றை உருவாக்கும் உறுதியினை எடுத்துக்கொள்ள உங்களுக்கு துணிவிருக்கிறதா?
பூமியிலுள்ள ஒவ்வொரு உயிரும் தன் இச்சைப்படி செயல்பட்டு, இயற்கையின் விதிகளின்படி வாழ்ந்து, மடிந்துபோகிறது. மனிதனால் மட்டுமே, இயற்கை விதித்த விதிகளை கடந்து, தன்னைவிட பெரிதான ஏதோவொன்றை உருவாக்க இயலும். ஆனால், "என்னுடையது, உன்னுடையது" எனப் பிரித்து, எல்லைகள் வைத்துக்கொண்டு வாழ்கிறோம்.
உயிரை உங்களால் பாதுகாக்க முடியாது, செலவிடத்தான் முடியும். அற்புதமான ஒன்றை உருவாக்கலாம், மிக ஆழமான ஒன்றை படைக்கலாம், அல்லது அற்பமானவற்றை செய்யலாம் - எதைச் செய்தாலும் செய்யாவிட்டாலும் நீங்கள் இறந்து போவீர்கள். எப்படியிருந்தாலும் நீங்கள் மடிந்து போவீர்கள், "எப்படி" என்பதுதான் கேள்வி. நம் வாழ்க்கையை வேண்டியபடி செலவிடக்கூடிய வரம் மனிதர்களுக்கு மட்டுமே கிடைத்திருக்கிறது. .அழகாய், ஆழமாய், பிரம்மாண்டமாய் அல்லது முட்டாள்தனமாய், பிரயோஜமில்லாமல், சோம்பேறித்தனமாய் வாழவிருக்கிறோமா என்பது நம் கைகளில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அற்பமான புத்தாண்டு தீர்மானங்களை நீங்கள் எடுக்க வேண்டாம் என்பது எனது பரிந்துரை.
வருடத்தின் இந்த நேரத்தில், வெளியே பல மாற்றங்கள் நிகழ்கின்றன. நமக்குள் நாம் மாறினால் மட்டுமே மனித வாழ்வின் தரம் உயரும். இல்லாதபட்சத்தில், மிக அழகான இடத்தில் இருந்தாலும், அவதிபட்டுக் கொண்டிருப்போம். உலகில் நமக்கு வேண்டியதை உருவாக்க, சில சக்திகளை ஒன்றிணைப்பது அவசியம். உங்களுக்குள் வேண்டியதை உருவாக்க, உங்களை நீங்கள் ஒன்றிணைப்பது அவசியம்.
உலகில் நீங்கள் அற்புதமானவற்றை உருவாக்கினால், அற்புதம். குறைந்தது, உங்களுக்குள்ளாவது அற்புதமானவற்றை நீங்கள் உருவாக்க வேண்டும்.
உங்களுக்குள் அற்புதமான விஷயங்கள் நிகழும்போது வெளியுலகில் அற்புதமானவற்றை நீங்கள் உருவாக்குவதை யாரும் தடுக்க முடியாது. இங்கொன்றும் அங்கொன்றுமாய் தடைகள் ஏற்படலாம், அவ்வளவுதான். கொஞ்சம் வேகத்தை குறைத்துக் கொண்டு, இயற்கைக் காட்சிகளை ரசித்துவிட்டு, மீண்டும் வேகம் பிடிக்க வேண்டியதுதான். ஏதோவொன்றை உருவாக்க முயலும்போது, முதலில் உங்களுக்குள் அற்புதமான ஒன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள். அதன்பின், செய்ய விரும்புவதை செய்யுங்கள். நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அதுதான் வெளியிலும் வெளிப்படும்.
இந்த கலாச்சாரத்தில், உத்தராயணம் என்பது அறுவடை நேரம். விவசாயத்தில் மட்டுமல்ல, ஆன்மீகத்திலும் இது அறுவடை நேரம்தான். பல சாதுக்களும், துறவிகளும், யோகிகளும் இந்நேரத்தில்தான் தன்னுடலை நீத்தனர்.
நீங்கள் உடல் விடவேண்டியதில்லை. உங்கள் குப்பைகளை துறந்துவிட்டு, வாழ்க்கையை புதிதாய், உயிரோட்டமாய் வாழலாம். அதிலிருந்து என்னென்ன புதிய சாத்தியங்கள் முளைக்கின்றன என்பதை நாம் பார்ப்போம். தரையில் ஊறும் உயிர்களுக்குகூட இந்த விவேகம் இருக்கிறது. தங்கள் தோலினை ஒரு குறிப்பிட்ட காலஇடைவெளியில் அவை உரிக்கின்றன. மனிதர்களிடமும் இதனை எதிர்பார்க்கத்தானே வேண்டும்?!
ஒரு பாம்போ, கரப்பான்பூச்சியோ தங்கள் மேல்தோலினை உரிக்கும்போது, ஏதுவான நிலையில் இருக்கின்றன. தோல் இல்லாமல் இயற்கையில் வாழ்வது அத்தனை பாதுகாப்பானதல்ல. எறும்புகளால்கூட உயிரைக் குடித்துவிட முடியும். இவற்றையெல்லாம் மீறி, இந்த சிறிய உயிர்களுக்குகூட அபாயத்தை சந்திக்கும் உள்ளார்ந்த ஞானம் இருக்கிறது. உங்கள் வாழ்விலும் இம்முடிவினை துணிச்சலாக எடுக்கலாமே! தினந்தோறும், பழைய தோலினை நீங்கள் உதிர்க்கலாமே!
பழைய வழிகளில் சிந்திப்பதை மாற்ற, அனைத்தையும் புத்தம் புதிதாய் காணும் ஆற்றலை பெருக்கிக் கொண்டால் நீங்கள் மிக அழகான மனிதராய் மாறிவிடுவீர்கள். உலகம் அழகானதாய் மாறிவிடும். இந்தப் புது "நீங்கள்" தீர்வை தேடுபவராய் இருப்பீர்கள். பிரச்சனைகளை நாடிச் செல்லபவராய் இருக்க மாட்டீர்கள்.
அத்தனை விஷயங்களையும் புத்தம் புதிதாய் காணும்போது, அத்தனையும் அற்புதமாய் இருக்கும்.
பூமிக்கு ஒரு புது அத்தியாயம் துவங்கியிருக்கிறது. நாமும் பூமியின் ஒரு பகுதிதான்.
அனைத்தையும் ஒரு குழந்தை பார்ப்பதுபோல் பாருங்கள். அனைத்தையும் அப்படியே உள்ளே ஈர்த்துக் கொள்ளுங்கள். எதை குறித்தும் கணித்துக் கொண்டிருக்க வேண்டாம், நல்லது-கெட்டது என்று முத்திரையிட வேண்டாம். சரி-தவறு என்று பார்க்க வேண்டாம். அன்பிற்குரியவர்கள்-வெறுப்பவர்கள் என்று மக்களை தரம்பிரிக்க வேண்டாம். வாழ்க்கையை இப்படி வாழுங்கள். இப்படிச் செய்யும்போது, வாழ்வை புதிதாய் துவங்குவீர்கள். வாழ்க்கை அற்புதமானதாய் இருக்கும்.
- சத்குரு, நிறுவனர், ஈஷா அறக்கட்டளை