தமிழகத்தில் நெல்லை மாவட்டத்துக்கு கடந்த ஆண்டு ரெட் அலர்ட் எனப்படும் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்தது.
அதன்பிறகு, கேரள மாநிலத்தில் மழை வெள்ளத்தின் போது ரெட் அலர்ட் என்ற வார்த்தை பரவலாக பயன்படுத்தப்பட்டது.
இந்நிலையில், தற்பொழுது, தமிழகத்தில் இன்று ஒரு சில மாவட்டங்களில் மிக அதிகமான மழை பெய்யும் எனவும், மாவட்ட ஆட்சியர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்திருந்தது.
தற்பொழுது வானிலை மையங்கள் அதிகமாக பயன்படுத்தும் வார்த்தையான “ரெட் அலர்ட்” என்றால் என்ன என்பதை விவரிக்கிறது இந்த கட்டுரை.
அடுத்த 5 நாட்களில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு மாநிலங்களில் வானிலை தொடர்பான பிரச்னைகள் ஏற்படும் என்று அறியும்பட்சத்தில் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கும். அந்த எச்சரிக்கையானது பச்சை எச்சரிக்கை (Green Alert ), மஞ்சள் எச்சரிக்கை (Yellow Alert), ஆம்பர் எச்சரிக்கை ( Amber Alert) மற்றும் சிவப்பு எச்சரிக்கை (Red Alert) என மொத்தம் நான்கு வகைகளாக பிரிக்கப்படுகிறது.
மேலும் படிக்கலாம்.. கொடைக்கானலில் பலத்த மழை: அடுக்கம் - பெரியகுளம் மலைச் சாலையில் நிலச்சரிவு
பச்சை எச்சரிக்கை (Green Alert) :
பொதுவாக மழை பெய்யும் அறிகுறி வானில் தென்பட்டாலே இந்த எச்சரிக்கை விடப்படும். இதனால் மக்கள் யாரும் பயப்பட வேண்டிய தேவை இல்லை. ஏனெனில், மழை பொழிவதற்கான அறிகுறி தென்பட்டால் மட்டுமே பச்சை எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
மஞ்சள் எச்சரிக்கை (Yellow Alert) :
வானிலை மிகவும் மோசமாக இருப்பதை தெரிவிப்பதே இந்த மஞ்சள் எச்சரிக்கை ஆகும். இது போன்ற நேரங்களில் மக்கள் தங்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் தயார் நிலையில் வைத்துக் கொள்வது நல்லது.
அம்பர் எச்சரிக்கை (Amber Alert) :
பொருட்சேதம் அல்லது உயிர்ச் சேதம் ஏற்படுத்தும் அளவிற்கு வானிலை மோசமாக இருக்கும் பட்சத்தில் வானிலை ஆய்வு மையம் இந்த எச்சரிக்கையைத் தரும். இது போன்ற நேரங்களில் மக்கள் பயணங்களை தவிர்ப்பது நலம்.
சிவப்பு எச்சரிக்கை (Red Alert) :
மக்களின் இயல்பு நிலை பாதிக்கும் வகையிலும், அடிப்படை தேவைகளை அடைய முடியாத நிலை ஏற்படும் வகையில் மழைப் பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் போதே இந்த எச்சரிக்கை அளிக்கப்படும். போக்குவரத்து, மின்சாரம், இணையம், மற்றும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்படும் வகையில் மழை பெய்யும் போது தான் இது போன்ற எச்சரிக்கைகள் விடப்படும்
மிக மிக மோசமான வானிலை இருக்கும் பட்சத்தில் ரெட் அலர்ட் அறிவிக்கப்படும். அதாவது, மக்கள் தங்கள் உயிர், உடைமைகளை பார்த்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்களும், மாவட்ட நிர்வாகங்களும் மேற்கொள்ள வேண்டும்.
மக்களின் இயல்பு வாழக்கையினை பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் வானிலை இருக்கும் என்பதற்கான எச்சரிக்கையாகவே ரெட் அலர்ட் பார்க்கப்படுகிறது.
ஆனால், ஒரு மாநிலத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டாலே, அனைத்து மாநில மக்களும் பயப்பட வேண்டும் என்பது அவசியமல்ல, ஒரு மாநிலத்தின் எந்த மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பிருக்கிறது என்பதை அறிந்து கொண்டு அந்த மாவட்டத்தில் மட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்களும், மாவட்ட நிர்வாகங்களும் மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் இங்கே குறிப்பிட வேண்டிய முக்கிய விஷயம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.