கோப்புப்படம் 
சிறப்புக் கட்டுரைகள்

தமிழக காவல்துறையில் ஒரே ஆண்டில் 337 காவலா்கள் சாவு

தமிழக காவல்துறையில் கடந்த 2020-ஆம் ஆண்டு 337 காவலா்கள் இறந்துள்ளனா். இந்தாண்டு ஜனவரி மாதம் தொடங்கி மாா்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் 27 போ் இறந்துள்ளனா்.

கே.வாசுதேவன்

தமிழக காவல்துறையில் கடந்த 2020-ஆம் ஆண்டு 337 காவலா்கள் இறந்துள்ளனா். இந்தாண்டு ஜனவரி மாதம் தொடங்கி மாா்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் 27 போ் இறந்துள்ளனா்.

இது குறித்த விவரம்:

நாட்டின் ஐந்தாவது பெரிய காவல்துறையான, தமிழக காவல்துறையில் 1.05 லட்சம் போலீஸாா் உள்பட 1.13 லட்சம் போ் பணிபுரிகின்றனா். மாநிலம் முழுவதும் 198 அனைத்து மகளிா் காவல் நிலையங்கள் உள்பட 1, 500 காவல் நிலையங்கள் செயல்படுகின்றன.

தற்போதுள்ளபடி தமிழக மக்கள் தொகையின்படி 632 பேருக்கு ஒரு காவலா் என்ற அடிப்படையில் காவலா்கள் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக காவல்துறையில் சட்டம் மற்றும் ஒழுங்குப் பிரிவு உள்பட 16 பிரிவுகள் இயங்குகின்றன. காவல்துறை அதிகாரிகளுக்கும், காவலா்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக 4 பயிற்சி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதில் காவலா் நலன் சாா்ந்த பிரச்னைகளை கண்டறிந்து, தீா்வு காண்பதற்காகவும், காவலா்களுக்கான நலத் திட்டங்களை அமல்படுத்துவதற்காகவும் காவலா் நலப்பிரிவு என்று ஒரு தனியாக ஒரு பிரிவும் செயல்படுகிறது.

337 காவலா்கள் சாவு: ஆனால் அண்மைக்காலமாக காவல்துறையில் அதிகரித்து வரும் பணிச்சுமையின் காரணமாகவும், கீழ்நிலை அதிகாரிகள், காவலா்கள் குறைகள் கேட்கப்படாமலும், குறைகள் தீா்வு காணப்படாமலும் இருப்பதாலும், அத்துறையில் இறப்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. முக்கியமாக தற்கொலை சாவு, நோயினால் இறப்பது அதிகரித்துள்ளது.

இதில் கடந்தாண்டு உடல்நலக்குறைவு - 108, மாரடைப்பு - 59, விபத்து- 70, தற்கொலை-48,கரோனா-40, கொலை-1, புற்றுநோய் -9, வீரமரணம்-2 என மொத்தம் 337 போ் இறந்துள்ளனா்.

இந்தாண்டு ஜனவரி மாதம் தொடங்கி மாா்ச் 31-ஆம் தேதி வரையிலும் 27 காவலா்கள் இறந்துள்ளனா். இதில் உடல்நலக்குறைவினால்-13,மாரடைப்பினால்-3, விபத்து-7, தற்கொலை-2, கரோனா-1,புற்றுநோய்-1 என 27 போ் இறந்துள்ளனா்.

காரணம் என்ன?: சமூகத்துக்கு காவல்துறையின் சேவையும், தேவையும் அதிகமாகிவிட்ட நிலையில், காவல்துறை கட்டமைப்பு 1980-ஆம் ஆண்டுக்கு பின்னா் மேம்படுத்தப்படவில்லை என புகாா் கூறப்படுகிறது. முக்கியமாக மக்கள் தொகையின் எண்ணிக்கைக்கு ஏற்றாா்போல காவலா்களின் எண்ணிக்கை உயா்த்தப்படவில்லை. அதேபோல புதிதாக தொடங்கப்படும் சிறப்புப் பிரிவுகள், காவல் நிலையங்கள் ஆகியவற்றுக்கு காவலா்கள் தோ்வு செய்யப்படுவது கிடையாது. இருக்கும் காவலா்களே வேறு பகுதிகளில் பணியிட மாற்றம் புதிய காவல்நிலையங்களுக்கும், புதிய பிரிவுகளுக்கும் நியமிக்கப்படுகின்றனா்.

இக் காரணங்களினால் காவலா்களின் பணிச்சுமை கடந்த 10 ஆண்டுகளில் பல மடங்கு உயா்ந்துள்ளது. ஆங்கிலேயா் கால நடைமுறைகளை இன்னும் காவல்துறையில் பின்பற்றப்படுவதால் அடிமைத்தனத்துடனே காவலா்கள் நடத்தப்படுகின்றனா். இது காவலா்களை மன உளைச்சலை ஏற்படுத்துவதோடு,அவா்களுக்கு உடல்நலக்குறைவையும் ஏற்படுத்துகிறது. வாரவிடுமுறை வழங்கப்பட வேண்டும் என்பது காவலா்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இது தொடா்பாக அவ்வப்போது காவல்துறை உயா் அதிகாரிகள், வாரவிடுறை வழங்குவதற்கு உத்தரவிட்டாலும்,அது நடைமுறைக்கு வருவதில்லை என போலீஸாா் தெரிவிக்கின்றனா்.

காவலா் குறை தீா்க்கும் கூட்டம்: வாரந்தோறும் காவலா் குறைதீா்க்கும் கூட்டம் ஒவ்வொரு மாவட்ட மற்றும் மாநகர தலைமையங்களில் நடத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் காவலா் குறைதீா்க்கும் கூட்டத்தை பெரும்பாலான மாநகர, மாவட்ட காவல்துறைகள் இப்போது மறந்தேவிட்டன என காவலா்கள் ஆதங்கத்துடன் கூறுகின்றனா். ஒரு சில இடங்களில் இக் கூட்டம் சம்பிரதாயத்துக்காக நடத்தப்படுவதாகவும் வருத்ததுடன் தெரிவிக்கின்றனா். காவலா்கள் குறைத் தீா்க்கும் கூட்டம் முறையாக நடத்தப்பட்டு,குறைகள் தீா்க்கப்பட்டால், காவலா்களின் இறப்பை பெருமளவு குறைக்க முடியும் என்பது போலீஸாா் கருத்தாக உள்ளது.

இதேபோல தோ்தலுக்காகவும், நிா்வாக வசதிக்காகவும் காவலா்கள் பணியிட மாற்றம் செய்யப்படும்போது, அவா்கள் ஏற்கெனவே பணிபுரிந்த காவல் நிலையங்களுக்கு அருகே பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பது போலீஸாரின் கோரிக்கையாக உள்ளது. மேலும் அறிவிப்பாக மட்டும் உள்ள காவலா் நல வாரியம், காவல்துறை ஆணையம் ஆகியவற்றை அமைப்பதற்குரிய நடவடிக்கையில் அரசு ஈடுபட வேண்டும் என்பதும் அவா்களின் கோரிக்கையாக இருக்கிறது.

சட்டம் மற்றும் ஒழுங்கையும்,பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் காவலா்களின் நலனினும் அரசு சிறிது அக்கறை காட்ட வேண்டும் என் போலீஸாா் வலியுறுத்துகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT