மூளையில் துர்நாற்றம் எவ்வாறு உணரப்படுகிறது என்பதை நம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நறுமணத்தைவிட துர்நாற்றம் நமது மூளையில் மிக விரைவாக செயலாக்கப்படுவதாக புதிய ஆய்வு தெரிவிக்கிறது. இந்த தகவல், டோக்கியோ பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் ஆய்வு மூலம் கண்டறியப்பட்டு 2022, மே மாதம், 27ம் நாள் வெளியிடப்பட்டது.
வாசனை அறியும் மூளை
பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட வாசனையை விநியோகிக்கும் சாதனம், உணர்வுகளை பதிவுசெய்ய எலெக்ட்ரோ என்செபலோகிராம்(Electro Encephalogram) இயந்திரக் கற்றல் அடிப்படையிலான பகுப்பாய்வுகள், மூளையில் நாற்றங்கள் எப்போது எங்கே செயலாக்கப்படுகின்றன என்பதைக் கண்டறிய ஆராய்ச்சியாளர்களுக்கு உதவியது.
ஆய்வில், உணர்தல் ஏற்பட்டபோது, நல்ல நாற்றங்களைவிட விரும்பத்தகாத துர்நாற்றங்கள் விரைவாக அறியப்பட்டு செயலாக்கப்பட்டதை அறிந்தனர். துர்நாற்றத்தைப் புரிந்துகொள்வதில் உள்ள சிக்கல்கள் நரம்பியல் கடத்தல் நோய்களின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். எனவே, வாசனை என்பதன் அறிவியல், உணர்வின் நரம்பியல் தளங்களைக் கண்டுபிடிப்பது எதிர்காலத்தில் அந்த பகுதி தொடர்பான நோய்களைப் பற்றி நன்கு புரிந்துகொள்ள உதவும்.
ஆய்வும் முடிவும்
உங்களின் அடுத்த அறையில் ஒரு சூடான காபி கொண்டு வரப்படுகிறது. அந்த காபியின் வாசனை உங்களை அதனை நோக்கி இழுக்கும். ஒரு சூடான காபியின் வாசனை உங்கள் நாளை சரியான வழியில் தொடங்க உதவுமா? அல்லது வலிமையான, பிரச்னையான தாங்கமுடியாத வாசனையை உங்களால் தாங்க முடியவில்லையா?
புதிய ஆராய்ச்சியின்படி, வாசனையை உங்கள் மூளை எவ்வளவு விரைவாகச் செயலாக்குகிறது என்பது அந்த வாசனை இனிமையானதா இல்லையா என்பதைப் பொருத்து இருக்கலாம். டோக்கியோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு குழு, துல்லியமான மற்றும் சரியான நேரத்தில் 10 மாறுபட்ட வாசனைகளை வழங்கக்கூடிய ஒரு சிறப்பு சாதனத்தை உருவாக்கியுள்ளது.
இதில், மூளைக்குள் சிக்னல்களைப் பதிவு செய்யும் எலக்ட்ரோ என்செபலோகிராம் (Electro Encephalogram -EEG) சாதனத்தை அணிந்திருக்கும்போது பங்கேற்பாளர்கள் வாசனையை நுகர அறிவுறுத்தப்பட்டனர். இப்போது அவர்களின் உணர்வுகள் மதிப்பிடப்பட்டது.
இயந்திரக் கற்றல் அடிப்படையிலான கணினி பகுப்பாய்வைப் பயன்படுத்தி EEG தரவின் அடிப்படையில் மூளையில் நாற்றங்களின் வரம்பு எப்போது, எங்கு செயலாக்கப்பட்டது என்பதைக் காண முடிந்தது.
துர்நாற்றங்கள் நறுமணத்தைவிட விரைவில் அறிதல்
துர்நாற்ற வாசனை செலுத்தப்பட்டு 100 மில்லி விநாடிகளில் உணரப்பட்டது கண்டு விஞ்ஞானிகள் வியந்துபோனார்கள். இது மூளையில் வாசனைத் தகவல்களின் பிரதிநிதித்துவம் மிக விரைவாக நிகழும் என்றும் தெரிவிக்கிறது என வேளாண் பட்டதாரி பள்ளியின் முனைவர் மாணவர் முகிஹிகோ காடோ கூறினார். இவர் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் வாழ்க்கை அறிவியல் துறையைச் சேர்ந்தவர்.
பங்கேற்பாளர் உணர்வுப்பூர்வமாக உணரப்படுவதற்கு முன்பே மூளை துர்நாற்றத்தை உணர்ந்தது கண்டறியப்பட்டது.
சுமாரான அல்லது இனிமையான நாற்றங்களிலிருந்து 300 மில்லி விநாடிகளுக்கு முன்பே துர்நாற்றத்தை மூளை உணர்கிறது.
மனித இனம் உயிர் வாழ்தலுக்கு வாசனை அறிதல் அவசியம்
மனித இனம் உருவானபோதும்/மனிதக் கருவிலும் முதன்முதல் உருவானது வாசனை உணர்வே. இதுதான் நமது உயிர் வாழ்தலை உறுதிப்படுத்தியது. அழுகிப்போய், கிருமிகள் உள்ள உணவை உண்டால் மனிதன் இறந்து போவான். உணவு கெட்ட வாசனையா, நல்ல வாசனையா என்று அறிந்தே ஆதி மனிதன் உணவு உட்கொண்டான். எனவே, தான் உணவு வைத்ததும் அனைத்து விலங்குகளும் உணவை முகர்ந்து பார்க்கின்றன.
சோதனையின்போது, நல்ல இனிமையான வாசனைகள் (மலர் மற்றும் பழ வாசனைகள் போன்றவற்றை 500 மில்லி விநாடிகள் வரை மூளையில் உணரப்படவில்லை. அதேநேரத்தில் தரம் குறைந்த வாசனைகள், குறிப்பிடப்பட்ட நேரத்தில் துர்நாற்றம் தொடங்கிய 600-850 மில்லி விநாடிகளில் உணரப்பட்டுள்ளன.
துர்நாற்ற உணர்வு ஆபத்தின் எச்சரிக்கை
எனினும் விரும்பத்தகாத நாற்றங்கள் பற்றிய முந்தைய கருத்து என்பது சாத்தியமான ஆபத்துகளுக்கு எதிரான ஒரு ஆரம்ப எச்சரிக்கையாகக்கூட இருக்கலாம்.
நமது மூளை எவ்வாறு நாற்றங்களைச் செயலாக்குகிறது என்பதற்கான சோதனைகள், எதிர்காலத்தில் உயர் டெம்போரல் ரெசல்யூஷன் இமேஜிங் எதிர்காலத்தில் பார்கின்சன் மற்றும் அல்சைமர் நோய்கள் (Parkinson's and Alzheimer's diseases)போன்ற நரம்பியக் கடத்தல் நோய்களின் வழிமுறைகளை நன்கு புரிந்துகொள்வதற்கான ஒரு துவக்கப் புள்ளியாகக்கூட இருக்கலாம்,
இதில் வாசனை உணர்வில் செயலிழப்பு என்பது ஒரு ஆரம்ப எச்சரிக்கை அறிகுறியாகும். மேலும் பல ஆராய்ச்சி வழிகளை ஆராய்வதில் குழு ஆர்வமாக உள்ளது. மேலும் ஒவ்வொரு உணர்வும் மற்றொன்றின் உணர்வை பாதிக்கிறது என்று காடோ கூறுகிறார்.
தற்போதைய ஆய்வில் வாசனை உணர்வுத் தூண்டுதல்களை மட்டும் வழங்கியிருந்தாலும், நாற்றங்களை வழங்குவது போன்ற இயற்கையான நிலைமைகளின் கீழ் மூளையின் செயல்பாட்டை பகுப்பாய்வு செய்வது முக்கியம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிக்க | அறிவியல் ஆயிரம்: ஈபிள் கோபுரத்தில் பெயர் பொறிக்கப்பட்ட விஞ்ஞானி ஜீன்-சார்லஸ் டி போர்டா