தலையங்கம்

மாஃபியாவின் மோசடி!

தமிழக அரசை மத்திய அரசு எந்த அளவுக்கு மோசமாக நடத்துகிறது என்பதற்கு அப்பட்டமான சாட்சி - அரசு கேபிள் நிறுவனத்துக்கு "டிஜிட்டல் மய' உரிமம் வழங்காமல் காலதாமதம் செய்வதுதான்.

ஆசிரியர்

தமிழக அரசை மத்திய அரசு எந்த அளவுக்கு மோசமாக நடத்துகிறது என்பதற்கு அப்பட்டமான சாட்சி - அரசு கேபிள் நிறுவனத்துக்கு "டிஜிட்டல் மய' உரிமம் வழங்காமல் காலதாமதம் செய்வதுதான்.

தமிழக அரசு கேபிள் டி.வி. நிறுவனம் ஜூலை 5-ஆம் தேதி "டிஜிட்டல் மய' சேவைக்கு விண்ணப்பித்து இத்தனை மாதங்கள் கடந்தும் உரிமம் வழங்கப்படவில்லை. இதே காலகட்டத்தில் விண்ணப்பித்த 9 நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுவிட்டது. மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சரை அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்று பார்த்து, விளக்கியும் உரிமம் கிடைக்கவில்லை. இதில் பிரதமருக்குத் தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

அரசு கேபிள் டி.வி. என்ன அணுஉலைக்கூடம் கட்டவா அனுமதி கேட்டது? வெறும் தொழில் உரிமம்தான் இது! விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களும் தரப்பட்டு, அனைத்து நிபந்தனைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. "டிஜிட்டல் மய' உரிமம் கேட்கும் மாநில அரசின் இந்த விண்ணப்பத்தை நிராகரிக்க எந்த முகாந்திரமும் மத்திய அரசிடம் இல்லை. இருந்திருந்தால், இன்ன காரணத்தால் அனுமதி மறுக்கிறோம் என்று சொல்லியிருக்க வேண்டும். எதையும் செய்யாமல் இந்த விண்ணப்பத்தைக் கிடப்பில் போடுவதைப் போன்ற நியாயமற்ற செயல் வேறுஎதுவும் இல்லை.

அரசு கேபிள் நிறுவனம், தமிழக அரசினால் நடத்தப்படுகின்றது. வழக்கமாக ஒரு தொழில் உரிமத்துக்காக அரசு நிறுவனம், தனியார் நிறுவனம் இரண்டும் விண்ணப்பிக்கும்போது, அரசு நிறுவனத்தின் விண்ணப்பத்துக்கு முன்னுரிமை கொடுத்து விரைவில் அனுமதி வழங்குவதுதான் நடைமுறை. ஏனென்றால், அரசு நிறுவனத்துக்கு அனுமதி அளிப்பதால் அரசு அதிகாரி யாருக்கோ விலை போய்விட்டார் என்று குற்றம் சொல்ல வாய்ப்பில்லை. தனியாருக்கு மட்டும் அனுமதி அளித்தால், நிச்சயமாக விலைபோய்விட்டார் என்று சொல்ல இடமுண்டு.

ஆனால், தமிழகத்தில், "சுமங்கலி கேபிள்' உள்பட 9 தனியார் நிறுவனங்களுக்கு டிஜிட்டல்மயத்துக்கான உரிமத்தை மத்திய அரசு அளித்துள்ளது. தமிழக அரசுக்கு மட்டும் இழுத்தடிப்புச் செய்வதற்கு என்ன காரணம் என்பது இந்தியாவில் அனைவருக்கும் தெரியும். ஆனால், பிரதமர் மன்மோகன் சிங் மட்டுமே இது குறித்து அறியாதவராக இருக்கிறார். பாவம்!

இந்தியாவில் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவை தற்போது "அனலாக் கேபிள் சிஸ்டம்', "டிஜிட்டல் கேபிள் சிஸ்டம்', "டி.டி.எச்.' ஆகிய மூன்று வகையாக தனியாரால் வழங்கப்பட்டு வருகின்றது. இந்தியா முழுவதிலும் "டிஜிட்டல் அட்ரஸ் சிஸ்டம்' மூலமாக மட்டுமே வழங்க வேண்டும் என்ற முடிவை மத்திய அரசு மேற்கொண்டது.

இதனடிப்படையில், முதல்கட்டமாக பெருநகரங்களில் அக்டோபர் 2012-க்குள்ளாகவும், அடுத்தநிலை நகரங்களில் மார்ச் 2013-க்குள்ளாகவும், பிறகு அனைத்து ஊரகப் பகுதிகளிலும் படிப்படியாகவும் திட்டத்தை விரிவுபடுத்தி 2014-ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தியா முழுவதிலும் டி.வி. ஒளிபரப்பை டிஜிட்டல்மயமாக்கிட மத்திய செய்தி, ஒலிபரப்புத்துறை அமைச்சகம் முடிவு செய்து, அறிவிப்பையும் வெளியிட்டது. அதனடிப்படையில்தான் ஜூலை 5-ஆம் தேதி தமிழக அரசின் கேபிள் நிறுவனமும் தனது விண்ணப்பத்தை அளித்தது.

தற்போது சென்னையில் "செட்-டாப் பாக்ஸ்' அல்லது "டி.டி.எச்.' சேவை பெறும் வீடுகள் சுமார் ஒரு லட்சம் மட்டுமே. சுமார் 45 லட்சம் வீடுகளில் டிஜிட்டல் கேபிள் சேவை மூலம்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காண்கிறார்கள்.

அரசு கேபிள் நிறுவனத்துக்கு ஏன் உரிமம் வழங்காமல் இழுத்தடிக்கப்படுகிறது என்பதற்கு இந்தப் புள்ளிவிவரமே போதுமானது. சென்னை பெருநகரில் நீதிமன்ற வழக்கினால் டிசம்பர் 31-க்குப் பிறகும் காலநீட்டிப்பு செய்யப்படாவிடில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தெரியாமல் போகும் என்ற அச்சத்தில் இந்த 45 லட்சம் பேரும் வேகமாக "டி.டி.எச்.' சேவைக்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள்.

தற்போது தமிழ்நாட்டில் டிஜிட்டல்மய உரிமம் பெற்றுள்ள 9 தனியார் நிறுவனங்களும் பல லட்சம் வீடுகளை "டி.டி.எச்.' சேவைக்கு மாற்றத் தொடங்கிவிட்டன. சென்னையில் ஒரு தனியார் நிறுவனம் மட்டுமே 60% வாடிக்கையாளர்களை "டி.டி.எச்.' சேவைக்கு மாற்றியுள்ளது என்று கூறப்படுகிறது. மற்ற எட்டு நிறுவனங்களும் மீதமுள்ள 40% நுகர்வோரைப் பங்கு போட்டுக்கொள்ள வேண்டும். அரசு கேபிள் நிறுவனத்துக்கு சத்தியமாக உரிமம் கொடுப்பார்கள். ஆனால், உரிமம் கிடைத்து தெருவுக்கு வரும்போது, எல்லா வீடுகளிலும் ஏற்கெனவே "செட்-டாப் பாக்ஸ்' நிறுவப்பட்டுவிட்டிருக்கும். இதுதான் அவர்களது மறைமுகத் திட்டம்.

பல நூறு கோடி முதலீட்டிலான அரசு கேபிள் நிறுவனம், ஒன்று, மூடப்பட வேண்டும் அல்லது நட்டத்தில் இயங்க வேண்டும். இதுதான் மத்திய அரசு தமிழகத்துக்குத் தரும் பரிசு! மத்திய அரசை இயக்கும் குடும்பம் தமிழகத்துக்கு வழங்கும் நீதி!

அரசு கேபிள் நிறுவனம் ரூ.70 வசூலிக்கச் சொன்னாலும் கேபிள் ஆபரேட்டர்கள் ரூ.100 கொடுக்கும்படி கட்டாயப்படுத்துகிறார்கள். இன்னும் முழுக்க முழுக்க தனியார் ஏகபோகம் என்றால், அவர்கள் சொல்வதுதான் கட்டணம், அவர்கள் விரும்பினால் சில சானல்கள், சில பேட்டிகளின்போது "அலைஅலையாய்' அலையும். அப்படியானால், இங்கே நடப்பது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஆட்சியா? இல்லை ஆட்சியை சட்டை செய்யாத பணக்காரத் தொலைக்காட்சி மாஃபியாக்களின் ஆட்சியா?

மாநிலத்தில் அணுஉலைக்கூடம் தொடங்கினால், மாநில அரசு அதை வரவேற்று உடனே இடம் தர வேண்டும், மாசுக் கட்டுப்பாடு வாரியம் நெளிவுசுளிவுடன் அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது. ஆனால், உப்பு சப்பில்லாத ஒரு தொழில் உரிமத்தை, "யாருடைய லாபத்துக்காகவோ' காலதாமதம் செய்கிறது. இந்த முறையற்ற செயலுக்கு பழுத்த அரசியல்வாதிகள் தங்கள் குடும்பநலன் கருதி ஆதரவாக இருக்கிறார்கள்.

அரசு கேபிள் நிறுவனத்துக்கு உரிமம் வழங்காமல் இருப்பதற்காக மத்திய அரசில் தங்களது செல்வாக்கை உபயோகித்து, தொலைக்காட்சித் துறையின் ஏகபோகத்தை அனுபவிக்க முற்படுபவர்களைக் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய வழியில்லையே, என்ன செய்ய? தட்டிக் கேட்க யாருமே இல்லையா...?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT