புதுதில்லியில் இரு நாள்களுக்கு முன்பு நடைபெற்ற அனைத்து மாநில தலைமைச் செயலர்கள் மற்றும் காவல்துறை தலைவர்கள் கூட்டத்தில், வல்லுறவுக் குற்றத்துக்கு மரண தண்டனை குறித்து உடன்பாடு ஏற்படவில்லை. இருப்பினும், சிறார் வயதை 18-லிருந்து 16 ஆகக் குறைக்கலாம் என்பதில் கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது.
இதற்குக் காரணம், தில்லியில் பாலியல் கொடுமைக்கு பலியான உடலியங்கியல் மாணவியின் வழக்கில் தொடர்புடைய 6 பேரில் ஒருவருக்கு வயது 17. ஆகவே அவர் சிறார் சிறையில் அடைக்கப்பட்டதுடன், அவர் மீதான வழக்கும் சிறார் நீதிமன்றத்திலேயே நடைபெற இருக்கிறது. சிறார் நீதிமன்றம் கடுமையான தண்டனைகள் விதிக்காது. ஆகவே, இந்தக் குற்றவாளி சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துவிடுவார் என்று கூறி, பல்வேறு மகளிர் அமைப்புகள் நடத்திவரும் போராட்டத்தின் நெருக்கடியால் இத்தகைய கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது.
இந்தக் காலத்தில் இளைஞர்கள் பலரும் சின்ன வயதிலேயே எல்லாமும் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதை நியாயப்படுத்தி, சிறார் என்பதற்காக வயது வரம்பை 18-லிருந்து 16 ஆகக் குறைத்துவிடலாம் என்பதே பொதுக்கருத்து. இந்தக் கருத்து சரியானதுதான். ஆனால், இன்றைய சூழ்நிலையில் உணர்ச்சிவசப்பட்டு எல்லாவற்றையும் நியாயப்படுத்தும் போக்குதான் காணப்படுகிறது. உண்மையில் தேவைப்படுவது அறிவுபூர்வமான விவாதம்தான்.
சிறார் வயதை 16 ஆகக் குறைப்பதா? அல்லது குற்றம் செய்தவர்கள் சிறார்களாக இருந்தாலும், அவர்களது குற்றத்தின் தீவிரத்தைப் பொருத்து அவர்களை வழக்கமான நீதிமன்றத்தில் விசாரிப்பதா? அப்படியானால், அத்தகைய குற்றங்கள் எவையெவை? இவைதான் விவாதிக்கப்பட வேண்டும்.
16 வயது பூர்த்தியடைந்தவர் சிறார் இல்லை என்று சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டால், பல இளவயது திருமணங்கள் நடைபெறும். ஒரு பெண் 18 வயதில்தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற சட்டத்தின் அடிப்படை நோக்கத்தை கேலிக்குரியதாக மாற்றும்.
18 வயது நிரம்பியவருக்கு மட்டுமே ஓட்டுநர் உரிமம் தற்போது வழங்கப்படுகிறது. 16 வயது நிரம்பியவர் சிறார் அல்ல என்று முடிவானால், 16 வயதிலேயே 100 சிசி வாகனங்கள், கார்கள் ஓட்டுவதற்கு உரிமம் பெறத் தகுதியுடையவர்கள் ஆகிவிடுவர். இதுபோல, நிறைய சிக்கல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டே இருக்கும்.
குற்றம் செய்தவர் 18 வயதுக்குக் குறைவாக இருந்தால், அவர் செய்த குற்றத்தைப் பொருத்து அவரை வழக்கமான நீதிமன்றத்தில் எல்லாரையும் போல விசாரிக்கலாம் என்று, தற்போதுள்ள நடைமுறைகளில் மாற்றம் செய்வதும், அத்தகைய குற்றங்கள் எவையெவை என்று பட்டியலிடுவதும்தான் தற்போதைக்கு சரியான தீர்வாக இருக்க முடியும்.
தேசிய குற்ற வழக்குப் பதிவு அலுவலகம் தரும் புள்ளிவிவரத்தின்படி, 2011-ஆம் ஆண்டில் பதிவான வழக்குகளில் 64% குற்றவாளிகள் 16 முதல் 18 வயதுக்குள் இருப்பவர்கள். இவர்களில் 57% மிகமிக ஏழ்மையானவர்கள். 56% பேர் பள்ளி செல்லாத, அல்லது தொடக்கக் கல்வியை முடிக்காதவர்கள். நாட்டில் பதிவாகியிருக்கும் வல்லுறவு வழக்குகளில் 50% குற்றவாளிகள் இந்த இளம் வயதினராக இருக்கிறார்கள்.
அமெரிக்காவில் சில மாகாணங்களில், வல்லுறவு வழக்குகளைப் பொருத்தவரை, இத்தகைய குற்றவாளி 18 வயதுக்கு உள்பட்டவராக இருப்பினும்கூட, அவரை இளைஞனாகக் கருதி, சிறார் நீதிமன்றத்துக்கு வெளியே, வழக்கமான நீதிமன்றத்தில் விசாரிக்கலாம்; அவரை சிறுவனாகக் கருதத் தேவையில்லை என்று தெளிவான சட்ட வரையறை இருக்கிறது. வல்லுறவு மட்டுமல்ல, உரிமம் இல்லாமல் வாகன விபத்தில் சிக்குதல், கூட்டுச்சதியில் ஈடுபட்டு கொலை செய்தல், உரிமம் இல்லாமல் துப்பாக்கியுடன் திரிதல், பலமுறை தொடர்ந்து குற்றங்களில் ஈடுபடுதல் ஆகிய குற்றங்களுக்காகவும் இத்தகைய இளம்வயதினரை வயதுக்கு வந்தவர்களாகக் கருதி, அதற்கான நீதிமன்றத்தில் விசாரிக்கலாம் என்கிற விதிவிலக்குகள் அமெரிக்கா போன்ற மேல்நாடுகளில் நடைமுறையில் இருக்கின்றன. இதுபோன்ற திருத்தம்தான் நமக்கு இன்றைய தேவையாக இருக்கிறது.
ஒட்டுமொத்தமாக, சிறார் வயது வரம்பை 18-லிருந்து 16 ஆகக் குறைத்துவிட்டால், இளம்வயதில் செய்யக்கூடிய சிறுதிருட்டு, அடுத்தவரைத் தாக்கி காயப்படுத்துதல், கல்லூரிப் போராட்டத்தில் பொதுச் சொத்தை சேதம் செய்தல், விபத்து ஏற்படுத்துதல், மது அருந்திவிட்டு பொதுஅமைதிக்கு ஊறு செய்தல் என சாதாரண குற்றங்களுக்கும்கூட, 16 முதல் 18 வயதுக்குட்பட்டோர் வழக்கமான நீதிமன்ற நடைமுறைகளுக்கு உட்படுத்தப்படுவர். வளரும் இளம்பருவத்தினர் இதனால் அடையும் மனஉளைச்சல், தண்டனையில் பெறும் அவமானம் அவரை இந்தச் சமூகத்தில் வாழ்நாள் முழுவதும் ஒரு குற்றவாளியாகவே நீடிக்கும் நிலையை உருவாக்கிவிடும்.
இந்தியாவில், ஒரு பட்டம் பெறும் வயதுவரை, அதாவது 22 வயதுவரை தாய் தந்தையரின் வருமானத்தில்தான் இளைஞர்கள் வாழ்கிறார்கள். பிறகுதான் வேலை தேடுகிறார்கள். சிறார் வயதை 16 ஆகக் குறைப்பதன் மூலம், குடும்பத்தின் நிழலில் வாழும் இளைஞர்களை பெரிய குற்றவாளிகளாகச் சித்திரித்து, அவ்வாறே அவர்கள் ஆகிவிடும் சூழலும் ஏற்படும். இது சமூகத்துக்கே பாதிப்பைத் தரக்கூடியது.
அவசரப்பட்டும் ஆத்திரப்பட்டும் சட்டம் இயற்றிவிட முடியாது, கூடாது. அதனால் ஏற்படும் பின்விளைவுகளையும், சமுதாயத் தாக்கத்தையும் ஆராய்ந்து செயல்படுவதுதான் புத்திசாலித்தனம். தேவையில்லாத விஷயங்களுக்கெல்லாம், மேலைநாடுகளை முன்னோடியாகக்கொள்ளும் நாம், இதுபோன்ற பிரச்னைகளிலும் உலகளாவிய மாற்றங்களையும், சட்டங்களையும் ஆராய்ந்து செயல்படுதல் அவசியம். ஆகவே, வயது வரம்பை 16 ஆகக் குறைப்பதைக் காட்டிலும், எத்தகைய குற்றங்கள் சிறார் நீதிமன்றத்துக்கு அப்பாற்பட்டவை என்று வகைப்படுத்துவதுதான் இன்றைய தேவை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.