காவிரி நீர் கிடைக்காமல் சம்பா சாகுபடியில் தமிழக விவசாயிகள் அடைந்த இழப்பை கர்நாடக அரசுதான் ஈடு செய்ய வேண்டும் என வழக்குத் தொடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருப்பது பலருடைய புருவங்களை உயர்த்தியிருக்கிறது.
"முன்னெப்போதும் இல்லா வழக்கம்' என்று தோன்றினாலும், பாசனநீர், குடிநீர் இரண்டுக்கும் விலை நிர்ணயிக்க மத்திய அரசு நீர்க் கொள்கை அறிவிக்கும்போது, தமிழகத்துக்கு உரிமையான தண்ணீர் இல்லாததால் ஏற்பட்ட இழப்புக்கு கர்நாடகம்தானே பொறுப்பாக முடியும்?
பற்றாக்குறை காலத்துக்கான தண்ணீர் பகிர்வு அளவுகளை வைத்துப் பார்த்தாலும்கூட, கர்நாடக அணைகளில் தேங்கிய தண்ணீர் அளவை வைத்துக் கணக்கிடும் வேளையில், தமிழகத்துக்குக் குறைந்தது 30 டி.எம்.சி. தண்ணீர் நிலுவை இருக்கிறது. இது தமிழகத்துக்கு உரித்தான தண்ணீர். உரிமைப் பங்கு. இதை கர்நாடகமே பயன்படுத்திக்கொண்டது. இதனால் நாம் அடைந்த நஷ்டத்துக்கு அவர்கள்தானே பொறுப்பு?
கர்நாடக அரசு இதுவரை தமிழக அரசுக்குத் தர வேண்டிய தண்ணீரை முழுமையாக வழங்கவில்லை. நீதிமன்றத் தலையீடு, காவிரி கண்காணிப்புக் குழுவின் கண்டிப்பு ஆகியவற்றால் வேறுவழியில்லாமல் ஏதோ கொஞ்சம் தண்ணீர் வீட்டதே தவிர, தமிழகத்துக்கு ""தண்ணி காட்டும்'' போக்கை நிறுத்தவே இல்லை.
2011-இல் குறிப்பிட்ட காலத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டு சம்பா சாகுபடி நடந்தபோது, அப்போதும் கர்நாடகம் முழுமையாக தண்ணீரைத் திறந்துவிடவில்லை என்றாலும், பருவமழை பரவலாகப் பெய்ததன் காரணமாக 21 லட்சம் டன் நெல் கொள்முதல் ஆனது. ஆனால் அதே நிலைமை இப்போது கிடையாது. தமிழக விவசாயச் சங்கங்களின் கூற்றுப்படி, மொத்தத்தில் 50 விழுக்காடு நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, டெல்டா பகுதியில் ஆங்காங்கே பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் நஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை.
தமிழக விவசாயிகளின் பயிர் இழப்பை ஈடுசெய்யும் நடவடிக்கையாக, அவர்களது நெல் சாகுபடி செய்யப்பட்ட வயல்களுக்கு காப்பீட்டு சந்தாத் தொகையை அரசே செலுத்த முன்வந்தது. இதற்காக ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்தது. தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் வகையில் சொட்டுநீர் பாசனக் கருவிகளை விவசாயிகள் வாங்கிப் பயன்படுத்த மானியம் அறிவித்தது. சுமார் 70 கோடி ரூபாய் அளவுக்குத் தமிழக அரசுக்குக் கூடுதல் நிதிச்சுமை ஏற்படக் காரணம் - கர்நாடகம் உரிய நேரத்தில் நமது உரிமைப் பங்கு நீரைத் திறந்துவிடவில்லை என்பதுதான்.
தமிழக அரசு காவிரி நீர்இல்லாமல் பாதிக்கப்பட்ட வயல்களுக்கு ஏக்கருக்கு ரூ.13,692 கிடைப்பதை உறுதி செய்தாலும், தமிழக விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் கேட்டு டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். நெல் உற்பத்தி பாதியாகக் குறைந்து போனது ஒருபுறம் இருக்க, விவசாயிகளின் நஷ்டத்தையும் ஏற்கும் நிதிச்சுமை தமிழகத்துக்கு மட்டுமே ஏற்படுவது எந்த வகையிலும் சரியல்ல.
பருவமழை பொய்த்திருந்தால், அதற்கு வேறு யாரையும் குற்றம் சொல்ல முடியாது. ஆனால் கர்நாடக அணைகளில் தண்ணீர் இருந்தும்கூட, சுயநலப் போக்குடன் அவர்களே அதைப் பயன்படுத்தினார்களே தவிர, தமிழ்நாட்டுக்குத் திறந்துவிடவில்லை. உள்ளதைப் பகிர்ந்து விவசாயம் செய்வோம் என்ற மனநிலையைப் பெற மறுத்தது கர்நாடக அரசு. காவிரி நீர் கொடுக்காமல் ""ஏற்படுத்தப்பட்ட'' இந்த இழப்புக்கு, இதற்குக் காரணமான கர்நாடக அரசுதானே பொறுப்பேற்க வேண்டும்?
பயிர் இழப்பு மற்றும் நிவாரண உதவிகள் குறித்து ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க நிதியமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் தலைமையிலான குழு அண்மையில் டெல்டா மாவட்டங்கள் அனைத்திலும் ஆய்வு செய்து திரும்பியுள்ளது. இந்தக் குழு ஓரிரு தினங்களில் தனது அறிக்கையை அளிக்கும். தமிழக காவிரி டெல்டா பகுதியில், காவிரிநீர் இல்லாததால் எவ்வளவு விவசாய நிலங்களில் பயிர்கள் அழிந்தன, அல்லது விளைச்சல் குறைந்தது என்பதை இந்தக் குழு பட்டியலிடும். அதனடிப்படையில்தான் இழப்பீட்டுத் தொகையை தமிழக அரசு நீதிமன்றத்தில் முறையீடும்.
தமிழக அரசு தொடுக்கப்போகும் வழக்கை நீதிமன்றம் ஏற்குமா, அல்லது எடுத்த எடுப்பிலேயே தள்ளுபடி செய்யுமா என்ற கேள்விகள் ஒருபக்கம் இருந்தாலும்,இந்த வழக்கின் நியாயம் எவருக்கும் எளிமையாகப் புரியக்கூடியதுதான். இரு சகோதரர்களுக்குச் சொந்தமான ஒரு வீட்டின் வருவாயை ஒருவரே அனுபவித்தால், அதற்காக மற்றவர் எவ்வாறு சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து தனக்கான தொகையைப் பெற முடியுமோ, அதே நியாயத்தின்படி கர்நாடக அரசு பயன்படுத்திக்கொண்ட, தமிழகத்துக்குச் சேர வேண்டிய உரிமை நீர் அளவுக்கு ஏற்ப விலையை கொடுத்தே ஆக வேண்டும்.
காவிரி நீருக்கு தமிழக விவசாயிகள், ஆயக்கட்டுதாரர் உரிமையைப் பெற்றுள்ளனர். பொதுவான காலகட்டத்தில் எவ்வளவு நீர் தமிழ்நாட்டுக்கு உரிமைப் பங்கு, பற்றாக்குறை காலத்தில் தமிழகத்தின் உரிமைப் பங்கு எவ்வளவு என ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. இறுதித் தீர்ப்பு இன்னும் அரசிதழில் வெளியாகவில்லை என்பதாலேயே கர்நாடகம் எப்படியும் நடந்துகொள்ளலாம், தமிழகத்துக்கு தண்ணீர் தராமல் இருக்கலாம் என்ற போக்குக்கு இந்த வழக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க உதவும். மேலும், நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியாவதைத் தடுப்பது அரிது என்று கர்நாடக அரசுத் தரப்பில் வாதாடும் வழக்குரைஞர்களே கூறியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ள சூழலில் இந்த வழக்கை நீதிமன்றம் ஏற்கும் என்றே நம்பலாம்.
எங்கள் உரிமைப்பங்கு நீரைக் கொடு. அல்லது அதற்கு உரிய விலையைக் கொடு!
கேட்பது இதுதான் முதல்முறை என்பதால், கேட்பது முறையல்ல என்றாகிவிடுமா என்ன?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.