தலையங்கம்

கருப்பு ஆடுகள்!

ஆசிரியர்

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அன்னை மருத்துவக் கல்லூரி தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி என். கிருபாகரன் வெளியிட்டிருக்கும் துணிச்சலான கருத்து நீதியின் குரலாக ஒலிக்கிறது. கருப்பு வெள்ளை அங்கி அணிந்த சிலர் வழக்குரைஞர்கள் என்ற போர்வையில் மாஃபியாக்களாகவும், ஆள்கடத்தல், பயமுறுத்திப் பணம் பறித்தல் உள்ளிட்ட கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களாகவும் இருக்கிறார்கள் என்று தயங்காமல் கூறியிருக்கும் நீதிபதி என். கிருபாகரனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
அன்னை மருத்துவக் கல்லூரி விவகாரத்தில், அறக்கட்டளை உறுப்பினர்கள் சிலரின் சார்பில் ஆக்கிரமிப்பதற்கு வழக்குரைஞர்கள் சிலர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. வழக்குரைஞர்கள் என்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் காவல்துறையினர் தயங்குகிறார்கள் என்றும், சட்ட ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு வழக்குரைஞர் தொழிலை நெறிப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டிருக்கிறார்.
"வலுக்கட்டாயமாக ஏதாவது இடத்தைத் தங்கள் பொறுப்பில் எடுத்துக்கொள்ளவோ அல்லது தக்கவைத்துக் கொள்ளவோ, கருப்பு வெள்ளை அங்கி அணிந்துகொண்டு தங்களை வழக்குரைஞர்கள் என்று கூறிக்கொள்ளும் சமூக விரோதிகளை ஒப்பந்தம் செய்துகொள்வது வழக்கமாக மாறிவிட்டிருக்கிறது. அவர்கள் காவல்துறையினரைத் தடுக்கவும், தங்கள் செயலை தடுக்க முற்படுபவர்களை அச்சுறுத்தவும் தயங்குவதில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே இப்படியொரு நிலை தமிழகத்தில் காணப்படுகிறது. சொத்துப் பிரச்னைகளில் நீதித்துறையின் மீதும் காவல்துறையின் மீதும் மக்களின் நம்பிக்கை குறைந்து வருவதற்கு இதுதான் காரணம்' என்று நீதிபதி கிருபாகரன் பொட்டில் அடித்தாற்போல கூறிவிட்டிருக்கிறார்.
கிரிமினல் பின்னணி உள்ள பலர் ஆந்திராவிலும், கர்நாடகத்திலும் செயல்படும் சில "லெட்டர் பேட்' சட்டக் கல்லூரிகளிலிருந்து பட்டம் பெற்று வழக்குரைஞர் தொழிலில் ஈடுபடுகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இந்தக் கல்லூரிகளில் போதுமான கட்டமைப்பு வசதிகளோ, தரமான ஆசிரியர்களோ இருக்கிறார்களா என்பதைக்கூட உறுதிப்படுத்தாமல் இந்திய பார் கவுன்சில் அந்தக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குகிறது. இதுவும் அனைவருக்குமே தெரியும் என்றாலும் இதுவரை இதுகுறித்து கவலை தெரிவிக்கவோ குரலெழுப்பவோ யாருக்கும் துணிச்சல் வரவில்லை. 
ஆந்திராவில் 200-க்கும் மேற்பட்ட சட்டக் கல்லூரிகளும் கர்நாடகத்தில் 125-க்கும் மேற்பட்ட சட்டக் கல்லூரிகளும் செயல்படுகின்றன. இந்தக் கல்லூரிகளில், வகுப்புக்குச் செல்லாமலேயே ஒருவர் பட்டம் பெற்றுவிட முடியும். தேவைக்கு அதிகமான அளவுக்கு சட்டக் கல்லூரிகள் அந்த மாநிலங்களில் ஏன் இருக்கின்றன என்று மத்திய - மாநில அரசுகளோ, இந்திய பார் கவுன்சிலோ சிந்தித்துப் பார்க்காமல் இருந்திருப்பதுதான் வினோதமாக இருக்கிறது. 
இந்தக் கல்லூரிகளில் பட்டம் பெற்று தங்களது கிரிமினல் நடவடிக்கைகளுக்கு வலுசேர்க்க வழக்குரைஞர்களாக பலர் களம் இறங்குகிறார்கள். இந்தக் கல்லூரிகளில் முறையான மாணவர் வருகைப்பதிவு காணப்படுகிறதா, தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்களா என்பன குறித்து ஆராய பார் கவுன்சில் ஆஃப் இந்தியா உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி என். கிருபாகரன் கூறியிருக்கிறார்.
2010-ஆம் ஆண்டில் இந்தியாவில் 800 சட்டக் கல்லூரிகள்தான் இருந்தன. அப்போது பார் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் தலைவராக இருந்த கோபால் சுப்பிரமணியம் இந்த அளவுக்கு சட்டக் கல்லூரிகள் இந்தியாவில் தேவையில்லை என்றும், நமது தேவைக்கு 175 சட்டக் கல்லூரிகளே போதும் என்றும் கருத்து தெரிவித்திருந்தார். சட்டக் கல்லூரிகளின் எண்ணிக்கையை 175-ஆகக் குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார் அவர். 
ஆனால், அவருக்குப் பிறகு பார் கவுன்சில் தலைமைக்கு வந்தவர்கள் அடுத்த இரண்டே ஆண்டுகளில் 800-ஆக இருந்த சட்டக் கல்லூரிகளின் எண்ணிக்கையை 1200-ஆக அதிகரிக்க அனுமதித்தனர். 2016-இல் மூன்று நாள்களுக்கு ஒரு சட்டக் கல்லூரிக்கு என்கிற அளவில் அனுமதிகள் வாரி வழங்கப்பட்டன. இதன் விளைவாகதான் வழக்குரைஞர்களின் தரம் குறைந்துவிட்டிருக்கிறது என்கிற நீதிபதி என். கிருபாகரனின் கருத்து மிக மிகச் சரி.
பல மாநிலங்களில் சட்டப் படிப்பில் சேர்வதற்கு எந்தவித மதிப்பெண் தகுதியும் தேவையில்லை என்கிற நிலை தொடர்கிறது. பல தனியார் "லெட்டர் பேட்' சட்டக் கல்லூரிகள் பணத்தை வாங்கிக்கொண்டு பட்டம் வழங்குவதும், எந்தவித தகுதிகாண் தேர்வும் இல்லாமல் பார் கவுன்சில்கள் அவர்களை வழக்குரைஞர்களாக பதிவு செய்து கொள்வதும் தொடரும் வரையில் வழக்குரைஞர்களின் தரம் குறித்து கவலைப்படுவதில் பயனில்லை. 
இதுபோல பட்டம் பெற்று வழக்குரைஞர்களாக பதிவு செய்து கொள்பவர்கள், தங்களது அரசியல் செல்வாக்கு மூலம் கீழமை நீதிமன்றங்களில் நீதிபதிகளாக நியமிக்கப்படும் வாய்ப்பும் உண்டு. அவர்கள் உயர்நீதிமன்றங்களுக்கும் உயர்த்தப்படமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? 
முறையாக வழக்குரைஞர் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பலரும், நீதித்துறையின் மீதும் சமூகத்தின் மீதும் அக்கறையுள்ள பலரும் வெளியில் தெரிவிக்க முடியாமல் மனப்புழுக்கத்துடன் அடக்கிவைத்துக் கொண்டிருந்த "போலி' வழக்குரைஞர்கள் பிரச்னையைத் துணிந்து கையிலெடுத்து சாட்டையை சுழற்றியிருக்கிறார் நீதிபதி என். கிருபாகரன். இதன் மூலமாவது இந்திய பார் கவுன்சிலும் மத்திய - மாநில அரசுகளும் விழித்துக்கொண்டு நீதித்துறையின் தரத்தை தூக்கி நிறுத்த துணியும் என்று எதிர்பார்ப்போமாக!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீரை சிக்கனமாக பயன்டுத்த தென்காசி நகா்மன்றத் தலைவா் வேண்டுகோள்

சுரண்டை பீடித்தொழிலாளா் மருத்துவமனையில் மே தின விழா

சித்திரை பெருந்திருவிழாவை ஒட்டி புளியங்குடி முப்பெரும் தேவியா் கோயிலில் 1008 அக்னிச்சட்டி ஊா்வலம்

கல்குவாரி வெடி விபத்து: நிவாரணம் வழங்க மாா்க்சிஸ்ட் கோரிக்கை

பாவூா்சத்திரம் ரயில்வே மேம்பாலப் பணிகள் தாமதம்: பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT