கோவை, விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளையில் கல்வி உதவித்தொகை பெறுவதற்காக ராம்நகரில் உள்ள அலுவலகத்தில் கூட்டம் அதிகரித்து வருகிறது .
கோவை, ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை சார்பில், கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டில் 10-ஆம் வகுப்பில் மேற்கண்ட 4 மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளில் படித்து 400 மதிப்பெண்களும் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து 450 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்ற மாணவ மாணவியருக்கு பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்குத் தலா ரூ. 5,000 வீதம் சுமார் 30 ஆயிரம் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இதேபோல, கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2-வில் 960 மதிப்பெண்களுக்கு மேலும், தனியார் பள்ளிகளில் படித்து 1,080 மதிப்பெண்களுக்கு மேலும் பெறும் மாணவ மாணவியர், கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்குத் தலா ரூ. 12,500 வீதமும், மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்குத் தலா ரூ. 25 ஆயிரம் வீதமும் அவர்கள் படித்து முடிக்கும் வரை வழங்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளியில் படித்து 1,080 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கான முழுக் கல்விக் கட்டணத்தையும் விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை ஏற்றுக் கொள்கிறது. தமிழகம் முழுவதும் சுமார் 3,000 பேர் இந்த உதவித்தொகையைப் பெற உள்ளனர். கோவை, ராம்நகரில் உள்ள விஜயலட்சுமி அறக்கட்டளை அலுவலகத்திற்கு, உதவித்தொகை கோரி விண்ணப்பிப்பதற்காக மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆயிரக் கணக்கில் வந்து செல்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.