அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அந்தந்த விவகார எல்லையில் உள்ள பள்ளிகளின் தலைமையாசிரியர்கள்...
அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அந்தந்த விவகார எல்லையில் உள்ள பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் ஒவ்வொரு வீடு வீடாக சென்று அதிகரிக்க செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வி துறை உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், கோடை விடுமுறையில் பள்ளி மாணவ, மாணவிகளின் கல்வி நலன் கருதி ஒவ்வொரு பள்ளி தலைமையாசிர்யர்கள் மற்றும் ஆசிரியர்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். அதன் அடிப்படையில் ஜூன்-1ம் தேதிக்கு முன்பாக பள்ளியை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல திட்டமிட வேண்டும்.
அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், பாடப்புத்தகம் முதல் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் மாணவ, மாணவிகளுக்காக அரசு செயல்படுத்தி வருகிறது. அதேபோல், தேவையான அளவுக்கு பள்ளிகளில் ஆசிரியர்களும் பணியில் உள்ளனர். மாணவ, மாணவிகளின் வசதிக்காக பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி பிரிவும் தொடங்கப்பட்டு வருகிறது.
Advertisement
இதைக் கருத்தில் கொண்டு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கவும், இடைநிற்றலை குறைப்பதும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் முக்கியமான பணியாகும். பள்ளிகளின் வளர்ச்சி என்பது அங்கு பணியாற்றும் தலைமையாசிரியர்கள் நடவடிக்கையை பொறுத்தே அமைகிறது. அதனால், தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.
அரசு பள்ளிகளில் நிகழாண்டில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் கூட்டம் நடத்தி பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை பெற வேண்டும். அதன் அடிப்படையில் அந்தந்த பள்ளிகளின் விவகார எல்லையில் உள்ள ஒவ்வொரு கிராமங்களுக்கும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர் ஆகியோர் நேரில் சென்று பெற்றோர்களிடம் பேசி மாணவர்கள் சேர்க்கையை உறுதி செய்து அதிகரிக்கச் செய்யவும், குறிப்பிட்ட இலக்கையும் அடைய வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.