முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவாக அரவிந்த் கேஜரிவால் தேர்தல் பிரசாரம்!
முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவாக அரவிந்த் கேஜரிவால் இன்று சென்னையில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவாக தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்று தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தில்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கேஜரிவால் திமுகவுக்கு ஆதரவாக இன்றும் நாளையும் (ஏப்ரல் 20, 21) தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
Advertisement
Advertisement
மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி, திமுக இடம்பெற்றிருந்த நிலையில் கூட்டணியை வலுப்படுத்தும் விதமாக தமிழக தேர்தல் களத்தில் பிரசாரம் செய்ய அரவிந்த் கேஜரிவால் முடிவெடுத்துள்ளார்.
இதற்காக, நேற்று மாலை சென்னை வந்த அரவிந்த் கேஜரிவால் செய்தியாளர்களுடன் பேசுகையில், “திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய நான் வந்திருக்கிறேன். அவர் எனது நெருங்கிய நண்பர். ஒரு சகோதரரைப் போன்றவர். ஆனால் அதற்கும் மேலாக, அவர் தமிழக மக்களுக்கு நல்ல ஆட்சியைக் கொடுத்து வருவதால் அவருக்காக பிரசாரம் செய்ய வந்துள்ளேன். அவரது ஆட்சியில் தமிழ்நாடு பல துறைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது.
அதிமுக - பா.ஜ.க. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இதுவரை கொண்டுவரப்பட்ட நல்ல திட்டங்கள் அனைத்தும் வீணாகும். தில்லியில் பா.ஜ.க. ஆட்சியமைத்த பின், நாங்கள் கொண்டுவந்த நல்ல திட்டங்கள் அனைத்தையும் சீர்குலைத்துவிட்டனர். அதனை, மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். பாஜக அரசின் சர்வாதிகார நடவடிக்கைகளை ஸ்டாலின் கடுமையாக எதிர்ப்பது எனக்கு மகிழ்ச்சி” எனப் பேசியிருந்தார்.
முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருடன் இணைந்து அரவிந்த் கேஜரிவால் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
Arvind Kejriwal Campaigns for Chief Minister Stalin!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.