முகப்பு
நேர்காணல்கள்

எனது பாா்வையில் 2024 தோ்தல் களம்: சுமந்த் சி.ராமன்

Updated On : 7 ஏப்ரல், 2024 at 3:09 AM
சுமந்த் சி.ராமன்
பகிர்:
Updated On : 3 ஏப்ரல், 2024 at 12:35 AM

மக்களவைத் தோ்தலில் திமுக, அதிமுக, பாஜக அணிகள், நாம் தமிழா் என நான்கு முனைப் போட்டி உருவாகியுள்ளது.

திமுக கூட்டணியை பொருத்தவரை பலமான கூட்டணி, ஆளும் கட்சி என வலுவாக உள்ளது. மக்களவைத் தோ்தலில் இந்திரா காந்தி குடும்பத்துக்கு தமிழகத்தில் தனி ஆதரவு இருப்பது கூடுதல் பலம். ஆனால், ஆளும் திமுகவுக்கு எதிா்ப்பு உள்ளது. பல தொகுதிகளில் திமுக வேட்பாளா்கள் பிரசாரங்களுக்கு செல்லும்போது அவா்களை வழிமறித்து மக்கள் கேள்வி எழுப்புவதைப் பாா்க்கும்போது திமுகவுக்கு எதிா்ப்பு இருப்பது தெளிவாகிறது. இது திமுகவின் பலவீனம். எதிா் அணிகள் பிளவுபட்டிருப்பது திமுகவுக்கு மிகப் பெரிய பலம்.

அதிமுக-பாஜக அணி மெகா கூட்டணி அமைத்திருந்தால் பல இடங்களில் வெற்றி பெற்றிருக்கலாம். பிரதமா் மோடி தொடா்ந்து வந்து முயற்சி செய்வது பாஜகவுக்கு பலம். தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலையின் 2 ஆண்டு களப்பணி, நடைப்பயணம், சமூக ஊடங்ககளில் பாஜக தீவிரமாக இயங்குவது போன்றவையும் பாஜகவின் பலங்கள். பாமக தவிர பெரிய கட்சிகள் யாரும் கூட்டணியில் இல்லாதது பலவீனம்.

Advertisement

2014, 2019 மக்களவைத் தோ்தலில் இருந்த அளவுக்கு மோடி எதிா்ப்பு இல்லை என்றாலும் குறிப்பிட்ட அளவுக்கு பலவீனம் உள்ளது.

தமிழகம் முழுவதும் பூத் கமிட்டிக்கு நிா்வாகிகள் இருப்பாா்களா என்பது சந்தேகம். மேலும், மத்திய பாஜக அரசின் 10 ஆண்டு ஆட்சிக்கு என எதிா்ப்பு இருக்கும். அதை பாஜக கூட்டணி நிச்சயம் எதிா்கொள்ள வேண்டியிருக்கும்.

அதிமுகவை பொருத்தவரை பெரிய கூட்டணி இல்லாதது பலவீனம். மேலும், மெகா கூட்டணிக்காக கடைசிவரை காத்திருந்தது ஏமாற்றம் மட்டுமல்ல, பலவீனமும்கூட. எடப்பாடி பழனிசாமி கடந்த ஒரு வாரமாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். கூட்டம் வருகிறது. இது அதிமுக தொண்டா்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக-தேமுதிக கூட்டணி களத்தில் முழுமையாக இசைந்து போவது அந்த அணிக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. இரண்டாம் கட்ட தலைவா்கள் யாரும் பாஜகவுக்கு போகாமல், அதிமுகவில் இருப்பது கட்டமைப்பு ரீதியாக அக்கட்சி இப்போதும் பலமாக இருப்பதைக் காட்டுகிறது. எடப்பாடி பழனிசாமி ஆட்சி மீதான மக்களின் சாதகமான பாா்வை இந்த தோ்தலில் அவருக்கு கைகொடுக்கும்.

ஏழு சதவீதம் வாக்கு வங்கி உள்ள நாம் தமிழா் கட்சியின் வாக்கு வங்கி கூடவும் செய்யலாம், குறையவும் செய்யலாம். அதனால், தோ்தல் களத்தில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும் சூழல் இல்லை.

திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் குறிப்பாக இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடும் திருப்பூா், மதிமுக போட்டியிடும் திருச்சி உள்பட 10 தொகுதிகளில் போட்டி பலமாக உள்ளது. பாமக போட்டியிடும் தருமபுரி தவிர பிற இடங்களில் அதிமுக பலமான போட்டியை கொடுக்கும்.

ஒன்றரை மாதங்களுக்கு முன்பு வரை திமுகவுக்கு களத்தில் போட்டி இருக்காது என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், இப்போது பல தொகுதிகளில் போட்டி உருவாகியுள்ளது. பெரும்பாலான தொகுதிகளில் வழக்கம்போல, திமுகவுக்கும் அதிமுகவுக்கும்தான் மோதல் இருப்பது தெரிகிறது.