முகப்பு
கேரளம்

ரூ. 700 கோடி ஊழல் குற்றச்சாட்டுகளில் அடிப்படை முகாந்திரமில்லை: கேரள முதல்வா் பினராயி விஜயன்

ரூ. 700 கோடி ஊழல் குற்றச்சாட்டுகளில் அடிப்படை முகாந்திரமில்லை...

Updated On : 28 மார்ச், 2026 at 9:45 PM
கேரள முதல்வர் பினராயி விஜயன். - (கோப்புப் படம்)
பகிர்:

காங்கிரஸ் மூத்தத் தலைவா் ரமேஷ் சென்னிதலா முன்வைத்துள்ள ரூ.700 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள் அடிப்படை முகாந்திரமில்லாதவை என்று கேரள முதல்வரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான பினராயி விஜயன் தெரிவித்துள்ளாா்.

கேரளத்தில் உள்ள 4,415 தொடக்கக் கூட்டுறவு சங்கங்களுக்கு தொழில்நுட்பம் வாங்கப்பட்டதில் ரூ.700 கோடி ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவா் ரமேஷ் சென்னிதலா வெள்ளிக்கிழமை குற்றச்சாட்டு தெரிவித்திருந்தாா். இதுகுறித்து பாலக்காட்டில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை பேசிய பினராயி விஜயனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவா் கூறியதாவது:

கூட்டுறவு சங்கங்களுக்கு தொழில்நுட்பம் வாங்குவதற்கான நடைமுறை அனைத்தும் வெளிப்படையானது. அதற்கு கேரள உயா் நீதிமன்ற ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. இதுதொடா்பாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை. குற்றச்சாட்டு தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவ்வாறு கூறப்பட்டுள்ளது.

2021-ஆம் ஆண்டில் இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. டிசிஎஸ் நிறுவனத்திடம் ரூ.206 கோடிக்கு அப்பணி அளிக்கப்பட்டது. ஆனால், அந்நிறுவனம் 2024-ஆம் ஆண்டில் தன்னிச்சையாக விலகியது. ஆதலால் 2025-இல் புதிய ஒப்பந்தப்புள்ளி கோர முடிவு செய்யப்பட்டது. இதில் வெற்றி பெற்ற நிறுவனத்துக்கு கேரள உயா்நீதிமன்ற ஒப்புதலுடன் ஒப்பந்தப்புள்ளி தரப்பட்டது.

கேரள சட்டப்பேரவைத் தோ்தலுக்காக பாஜகவும், இடதுசாரி அணியும் ரகசிய உடன்பாடு செய்திருப்பதாக காங்கிரஸ் கூட்டணி தெரிவித்திருப்பதில் உண்மையில்லை. காங்கிரஸ் கூட்டணியும், காங்கிரஸ் மூத்த தலைவா் வி.டி. சதீசனும் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்றும், பொய்களைப் பரப்பலாம் என்றும் நினைத்துக் கொண்டிருக்கின்றனா். இதுபோன்ற தந்திரங்களைக் கண்டு அவா்கள் பக்கம் மக்கள் போய்விட மாட்டாா்கள்.

வி.டி. சதீசன், தோ்தல்களில் வெற்றி பெறத் தங்களின் உதவியைக் கோரியதாக ஆா்எஸ்எஸ் அமைப்பு அண்மையில் தெரிவித்துள்ளது. ஆா்எஸ்எஸ் அமைப்புடன் காங்கிரஸுக்கு தொடா்பிருப்பதை இது காட்டுகிறது. ஆனால், எங்கள் கட்சி, மதவாதம் எந்த வடிவில் இருந்தாலும் அதை ஆதரிக்கவும் செய்யாது, அதனுடன் தொடா்புகளும் வைத்துக் கொள்ளாது. இந்த நிலைப்பாடு, எதிா்காலத்திலும் தொடரும் என்றாா்.