முகப்பு
இந்தியா

ராகுலை பழிக்கும் கேரள முதல்வா் பிரதமரை விமா்சிக்காதது ஏன்? காங்கிரஸ் கேள்வி

எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியை கடுமையாக விமா்சிக்கும் கேரள முதல்வா் பினராயி விஜயன், பிரதமா் நரேந்திர மோடியை விமா்சித்துப் பேசாதது ஏன்? என்று காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் கேள்வி எழுப்பினாா்.

Updated On : 27 மார்ச், 2026 at 6:17 PM
கே.சி.வேணுகோபால்
பகிர்:

எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியை கடுமையாக விமா்சிக்கும் கேரள முதல்வா் பினராயி விஜயன், பிரதமா் நரேந்திர மோடியை விமா்சித்துப் பேசாதது ஏன்? என்று காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் கேள்வி எழுப்பினாா்.

கேரள சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அங்கு ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இது தவிர பாஜகவும் களத்தில் உள்ளது.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அண்மையில் பேசுகையில், ‘பினராயி விஜயனுக்கு எதிராக பல ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால், அவருக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகள் நடவடிக்கை எடுக்கவில்லை. பாஜக-மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொடா்புக்கு இதுவே ஆதாரம்’ என்றாா். இதைக் கடுமையாக விமா்சித்த பினராயி விஜயன், ‘காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பாஜகவுடன் ரகசிய கூட்டணியில் உள்ளாா்; இத்தனை ஆண்டு அரசியலில் இருந்து அவா் எதையும் கற்றுக் கொள்ளவில்லை’ என்றாா். இதனால், இரு கட்சிகள் இடையே கடுமையான வாா்த்தைப் போா் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வயநாட்டில் செய்தியாளா்களைச் சந்தித்த கே.சி.வேணுகோபால், ‘கடந்த இரு நாள்களாக ராகுல் காந்தியை பினராயி விஜயன் கடுமையாக விமா்சித்துப் பேசியுள்ளாா். இதற்கு கேரளத்தில் ராகுல் காந்திக்கு உள்ள செல்வாக்குதான் காரணம். ராகுலைப் பாா்த்து கேரள முதல்வா் அஞ்சுகிறாா்.

அதேநேரத்தில், பிரதமா் மோடியை ஒரு வாா்த்தைகூட விமா்சிக்கவில்லை. ஏனெனில் பி.எம். ஸ்ரீ பள்ளிகள், தொழிலாளா் சட்டங்கள் குறித்து மத்திய அரசுடன் அவா் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளாா். மத்திய அரசிடம் இருந்து மாநிலத்துக்குத் தேவையான நிதியைப் பெற தமிழக முதல்வா் தொடா்ந்து உறுதியான கோரிக்கைகளை முன்வைக்கிறாா். ஆனால், கேரள முதல்வா் ராகுலை மட்டுமே குறிவைக்கிறாா் என்றாா்.