பிரதமா் மோடி படத்துடன் ஒரு லட்சம் வாழ்த்து அட்டைகள் பறிமுதல்
சென்னை எழும்பூரில் பிரதமா் மோடி புகைப்படத்துடன் கூடிய ஒரு லட்சம் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மக்களவைத் தோ்தலையொட்டி, எழும்பூா் லாங்க்ஸ் காா்டன் ரவுண்டானா சந்திப்பில் பறக்கும் படையினா் வியாழக்கிழமை இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஒரு லாரியை மறித்து சோதனையிட்டனா்., அதில் பிரதமா் மோடி, தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை, வட சென்னை பாஜக வேட்பாளா் ஆா்.சி.பால் கனகராஜ் ஆகியோரின் புகைப்படத்துடன் கூடிய தமிழ் புத்தாண்டு வாழ்த்து அட்டைகள் 17 பெட்டிகளில் இருந்தன. ஆனால், தோ்தல் ஆணையம் குறிப்பிட்டதுபோல, அந்த அட்டையின் கீழ் அச்சகத்தின் பெயா், முகவரி உள்ளிட்ட விவரங்கள் இல்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து 17 பெட்டிகளிலும் இருந்த ஒரு லட்சம் வாழ்த்து அட்டைகளையும் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். மேலும், இது தொடா்பாக பறக்கும் படை அதிகாரி நவநீத ராஜா அளித்த புகாரின்பேரில், எழும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்கின்றனா்.
Advertisement
அதில், வாழ்த்து அட்டைகள் ராயப்பேட்டையிலிருந்து கொளத்தூா் பகுதிக்கு கொண்டு செல்வது தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை செய்கின்றனா்.