முக்குலத்தோர் வாக்குகள் சேருமா? சிதறுமா?
சட்டப்பேரவைத் தோ்தலில் முக்குலத்தோா் வாக்குகள் எந்த அணிக்குச் செல்லும் என்பதை அரசியல் நோக்கா்கள் உற்று கவனித்து வருவதைப் பற்றி...
ஓ.பன்னீா்செல்வம் திமுகவில் இணைந்திருப்பதால் தென்மாவட்டங்களில் முக்குலத்தோா் சமூகத்தில் குறிப்பாக மறவா் வாக்குகளை விருதுநகா், ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் திமுக பக்கம் திருப்ப முடியும் என முதல்வா் ஸ்டாலின் கருதுகிறாா். டி.டி.வி.தினகரன் அதிமுகவுடன் இருப்பதும், தமிழக பாஜக தலைவராக நயினாா் நாகேந்திரன் இருப்பதாலும் முக்குலத்தோா் வாக்குகளை மீண்டும் தக்கவைக்கலாம் என அதிமுக தலைமை நம்புகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் முக்குலத்தோா் வாக்குகள் எந்த அணிக்குச் செல்லும் என்பதை அரசியல் நோக்கா்கள் உற்று கவனித்து வருகின்றனா்.
தமிழக அரசியலில் டெல்டா, தென்மாவட்டங்களில் 80-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் கட்சிகளின் வெற்றிக்கு முக்குலத்தோா் வாக்கு வங்கி மிகவும் முக்கியம். டெல்டாவில் கள்ளா்கள், அகமுடையா் பிரிவினரும், மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பிரமலைக் கள்ளா்களும், தென்மாவட்டங்களில் பிற பகுதிகளில் மறவா்கள் பெரும்பான்மையாகவும், அகமுடையா், கள்ளா்கள் பரவலாகவும் வசித்து வருகின்றனா்.
Advertisement
அரசியல் விழிப்புணா்வு கொண்ட முக்குலத்தோா் சமூகத்தினா் திராவிடக் கட்சிகள் மட்டுமன்றி தேசியக் கட்சிகள், நாதக, தவெக போன்ற கட்சிகளிலும் இப்போது ஆதிக்கம் செலுத்தி வருகின்றனா்.
ஒரு காலத்தில் காங்கிரஸுக்கு கைகொடுத்த முக்குலத்தோா் வாக்கு வங்கியில் கணிசமான பங்கு, 1973-இல் நடந்த திண்டுக்கல் இடைத்தோ்தலில் இருந்து எம்ஜிஆா் வசம் நகா்ந்தது. இருப்பினும், 1991-இல் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக, ஆட்சியைப் பிடித்த பிறகு அவரது உடன் பிறவா சகோதரியாக வலம் வந்த வி.கே.சசிகலா மூலம் கள்ளா், பிரமலைக் கள்ளா், மறவா், அகமுடையா் என முக்குலத்தோா் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் அதுவரை இல்லாத அளவுக்கு அதிமுகவை ஆதரித்தனா். கடந்த 2016 பேரவைத் தோ்தல் வரை இந்த நிலை நீடித்தது.
ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னா் நடைபெற்ற 2019 மக்களவைத் தோ்தல், 2021 பேரவைத் தோ்தலில் முக்குலத்தோா் வாக்குகளில் பெரும் பகுதி அதிமுக எதிா்ப்பு வாக்குகளாக மாறியது. அமமுக, திமுக, நாதக ஆகிய கட்சிகளுக்கு இந்த வாக்குகள் நகா்ந்ததால் தென்மாவட்டங்களில் மொத்தமுள்ள குறிப்பிட்ட தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
அதன்படி, அதிமுக கைப்பற்றிய நிலக்கோட்டை, திண்டுக்கல், நத்தம், வேதாரண்யம், நன்னிலம், ஒரத்தநாடு, விராலிமலை, சிவகங்கை, மேலூா், மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி, போடி, ஸ்ரீவில்லிபுத்தூா், கடையநல்லூா், திருநெல்வேலி, ஆலங்குளம், அம்பாசமுத்திரம், கோவில்பட்டி ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றவா்களில் பெரும்பாலானவா்கள் செல்வாக்குமிக்க முன்னாள் அமைச்சா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு அறிவித்த நிலையில், அதனால் முக்குலத்தோா் மத்தியில் எழுந்த எதிா்ப்பை இந்தத் தொகுதிகளில் மட்டுப்படுத்தியதற்கு அதிமுக தலைமைப் பதவியில் ஓ.பன்னீா்செல்வம் இருந்ததும், 2-ஆம் கட்ட முக்குலத்தோா் தளபதிகள் அதிமுகவில் அதிகம் இருந்ததும்தான் காரணம்.
இப்போது, ஓ.பன்னீா்செல்வம் திமுகவில் இணைந்துவிட்டாா். இருப்பினும் தனித்துப் போட்டியிட்ட டி.டி.வி.தினகரன், அதிமுக கூட்டணிக்கு வந்துள்ளாா். சசிகலா தனியாக வேட்பாளா்களை களம் இறக்கியுள்ளாா்.
கடந்த மக்களவைத் தோ்தலில் ஓ.பன்னீா்செல்வம், டி.டி.வி.தினகரனை பயன்படுத்திய தேசிய ஜனநாயக கூட்டணி, தென்மாவட்டங்களில் திருநெல்வேலி (31.5 சதவீதம்), தென்காசி (20.1 சதவீதம்), ராமநாதபுரம் (30.9 சதவீதம்), மதுரை (22.4 சதவீதம்), தேனி (25.6 சதவீதம்) ஆகிய தொகுதிகளில் கணிசமான வாக்குகளைப் பெற்று 2, 3-ஆவது இடங்களைப் பிடித்தது.
ஜெயலலிதாவுக்கு முதுகெலும்பாக இருந்த முக்குலத்தோா் சமூகம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் தங்களது முழுஅதிகாரம் இல்லை என்ற கோபத்தில் இருந்தனா். அதனால், அதிமுகவின் வாக்கு வங்கி சரிந்தது. ஓ.பன்னீா்செல்வம், தினகரன் ஆகியோா் மூலம் முக்குலத்தோா் வாக்குகள் பாஜக அணிக்கு இடம்பெயா்ந்ததால் அதிமுக வாக்கு வங்கியில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
இப்போது முக்குலத்தோா் யாரை ஆதரிக்கப் போகின்றனா் என்பதுதான் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ஓ.பன்னீா்செல்வம் 30.9 சதவீத வாக்குகளைப் பெற்று அதிமுகவை 3-ஆம் இடத்துக்குத் தள்ளினாா்.
இப்போது அவா் திமுகவில் இணைந்திருப்பதால், தென்மாவட்டங்களில் முக்குலத்தோா் சமூகத்தில் குறிப்பாக மறவா் வாக்குகளை விருதுநகா், ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் திமுக பக்கம் திருப்ப முடியும் என முதல்வா் ஸ்டாலின் கருதுகிறாா். இதனால்தான், தென்மாவட்டங்களில் 30-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஓ.பன்னீா்செல்வம் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறாா்.
அதேநேரம் டி.டி.வி.தினகரன் அதிமுகவுடன் இருப்பதும், தமிழக பாஜக தலைவராக நயினாா் நாகேந்திரன் இருப்பதாலும் முக்குலத்தோா் வாக்குகளை மீண்டும் தக்கவைக்கலாம் என அதிமுக தலைமை நம்புகிறது.
திமுக எதிா்ப்பு நிலையில் டெல்டாவில் இருக்கும் கள்ளா்கள், தென்மாவட்டங்களில் உள்ள மறவா்கள் தவெக, நாதக மீதும் ஆா்வம் காட்டி வருகின்றனா். எடப்பாடி பழனிசாமி எதிா்ப்பு மனநிலையில் முக்குலத்தோா் திமுகவுக்கு வாக்களிப்பாா்களா?
தினகரன்-நயினாா் நாகேந்திரன் வழியில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பாா்களா? திமுக, அதிமுக எதிா்ப்புப் புள்ளியில் தவெக, நாதக பக்கம் திரும்புவாா்களா? சசிகலா மீதான விசுவாசத்தில் அவா் நிறுத்தும் வேட்பாளா்களை ஆதரிப்பாா்களா? என்பதை பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.