வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பே வேட்புமனு தாக்கல்: பாஜக துணைத் தலைவர் கட்சியிலிருந்து நீக்கம்!
பாஜக தெற்கு மாவட்ட துணைத் தலைவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது பற்றி..
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தஞ்சாவூர் தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், தஞ்சாவூர் தொகுதிக்கு பாஜக வேட்பாளர் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட துணைத்தலைவர் முரளிதரன் கடந்த 30 ஆம் தேதி சுயேச்சையாக வேட்பு மனுத் தாக்கல் செய்தார். கட்சித் தலைமை வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பு சுயேச்சையாக வேட்பு மனுவைத் தாக்கல் செய்து தொடர்ந்து பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
அப்போது பேசிய அவர் தஞ்சாவூர் தொகுதி வேறு எந்த கட்சிக்கும் ஒதுக்கக்கூடாது. என் ராசிப்படி இன்று நல்ல நாள் அதனால் நான் வேட்புமனுவைத் தாக்கல் செய்கிறேன் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்,
கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாகவும் கட்சிக்குக் களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி கட்சியின் பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்குவதாகத் தெரிவித்துள்ளார். மேலும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் எந்தவித தொடர்பும் வைக்கக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.