பியூஷ் கோயல் சென்னை வருகை! பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது!
பியூஷ் கோயல் சென்னை வருகை குறித்து...
பேரவைத் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று(மார்ச் 31) வெளியாகும் எனத் தகவல் தெரியவந்துள்ளது. அதற்காக, மத்திய அமைச்சரும் பாஜக மேலிடப் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் சென்னை வருகை தரவுள்ளார்.
தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அக்கட்சி போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் முன்னதாக வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் பாஜக தலைமை தீவிரம் காட்டி வருகிறது. 2021 தேர்தலில் பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் வெற்றி பெற்ற கோவை தெற்கு மற்றும் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெற்றி பெற்ற திருநெல்வேலி தொகுதி இந்த முறை பாஜகவுக்கு ஒதுக்கப்படவில்லை.
Advertisement
Advertisement
இதனால், நயினார் நாகேந்திரன் சாத்தூா் தொகுதியிலும், வானதி சீனிவாசன் கோவை வடக்கு தொகுதியிலும் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த பரபரப்பான சூழலில் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்வு குறித்த உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் தேசிய அமைப்பு பொதுச் செயலர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் சென்னை கமலாலயத்தில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மேலிடப் பொறுப்பாளர் சுதாகா் ரெட்டி, மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன், மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களில் யாரை வேட்பாளரை நிறுத்தினால் வெற்றி பெற முடியும், அவர்களுக்கு தொகுதியில் உள்ள செல்வாக்கு, கட்சியில் பணியாற்றிய அனுபவம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
வேட்பாளர்கள் தேர்வு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை பங்கேற்பார் என்ற எதிா்பார்ப்பு அக்கட்சியினருக்கு மத்தியில் இருந்தது. ஆனால், ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பங்கேற்வில்லை.
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும், இதுதொடர்பாக தனது நிலைப்பாட்டை பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கும் கடிதம் மூலம் அண்ணாமலை தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதற்காக, மத்திய அமைச்சரும் பாஜக மேலிடப் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் இன்று சென்னை வருகை தரவுள்ளார்.
பியூஷ் கோயல் பாஜக வேட்பாளர் பட்டியலை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
It has been reported that the BJP's candidate list for the Assembly elections will be released today.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.