ஜப்பானிய தொழில்நுட்பம், முதலீட்டை பெரியளவில் பயன்படுத்த வேண்டும்: பியூஷ் கோயல்
ஜப்பானிய தொழில்நுட்பத்தையும் முதலீட்டையும் நாம் பெரிதளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பியூஷ் கோயல் பேசியது பற்றி...
ஜப்பானிய தொழில்நுட்பத்தையும் முதலீட்டையும் நாம் பெரிதளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் புதன்கிழமை (ஆக. 26) பேசியுள்ளார்.
ஜப்பானின் டோக்கியோ, நகோயா, ஒசாகா நகரங்களுக்கு, ஆகஸ்ட் 24 முதல் 27 வரை நான்கு நாள் பயணமாகமத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பயணம் மேற்கொண்டுள்ளார்.
உற்பத்தி, குறைக்கடத்திகள் (செமிகண்டக்டர்), தூய்மையான எரிசக்தி, எஃகு, வாகனத் துறை, நிதிச் சேவைகள், சுகாதாரம் மற்றும் புதிய தொழில் நிறுவனங்கள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட வர்த்தகப் பிரதிநிதிகள் கொண்ட குழு அவருடன் ஜப்பான் சென்றிருக்கிறது.
Advertisement
Advertisement
பயணத்தின் மூன்று நாள்கள் வெற்றிகரமாக கடந்துள்ள நிலையில், இதுகுறித்து ஜப்பானில் பியூஷ் கோயல் பேசியதாவது:
இந்தியாவிலிருந்து 200 பிரதிநிதிகள் கொண்ட குழுவுடன் நானும் ஜப்பான் வந்துள்ளது மகிழ்ச்சி. நான்கு நாள்கள் கொண்ட பயணத்தில் மூன்று நாள்கள் கடந்துவிட்டன. ஜப்பானில் கொடுக்கப்பட்ட வரவேற்பும், ஊக்கமும் என்னை வியப்பில் ஆழ்த்தியது. வணிகங்களுக்கு இடையிலான தொடர்புகள் கணிசமாக விரிவடைந்துள்ளன.
இந்தியா மீதான ஜப்பானியர்களின் கண்ணோட்டத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவை உலகளவில் வளர்ந்து வரும் நாடாக அங்கீகரித்த ஜப்பான், நமது திறன்களையும் சந்தையையும் பாராட்டுகிறது. இந்தப் பயணமானது, மிகப்பெரிய அளவில் வெற்றிபெறும் என்பதை நான் நம்புகிறேன். இந்தியாவில் ஏற்றுமதிக்கும், முதலீடு செய்வதற்கும் இந்தப் பயணம் ஊக்கமளிக்கும்.
இந்தியாவில் சுமார் 1,500 ஜப்பான் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த எண்ணிக்கையை 3,000 ஆக உயர்த்துவதை தனது இலக்காக நிர்ணயித்து பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
நிதிச் சேவைகள், காப்பீடு மற்றும் ஓய்வூதிய நிதிகள் போன்ற பல்வேறு துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதும், ஜப்பானிய தொழில்நுட்பத்தையும் முதலீட்டையும் பெரிய அளவில் பயன்படுத்திக் கொள்வதுமே நமது நோக்கம். கடந்த ஆண்டு ஏறக்குறைய ரூ. 7 லட்சம் கோடியை இந்தியாவில் முதலீடு செய்யப்போவதாக ஜப்பான் உறுதியளித்தது.
முதல் பத்து மாதங்களிலேயே ரூ. 1 லட்சம் கோடியை முதலீடு செய்துவிட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் மீதமுள்ள தொகையை இந்தியாவில் ஜப்பான் முதலீடு செய்யும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
Union Minister Piyush Goyal stated on Wednesday (August 26) that we must leverage Japanese technology and investment on a large scale.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.