முகப்பு
தமிழ்நாடு

தேர்தலில் போட்டியிடாததில் அண்ணாமலைக்கு வருத்தம் இல்லை! பாஜக தேசிய தலைவர்

அண்ணாமலை போட்டியிடாதது குறித்து பாஜக தேசிய தலைவரின் கருத்து...

Updated On : 9 ஏப்ரல், 2026 at 5:28 AM
பாஜக தேசிய தலைவர் நிதின் நவீன் - ANI
பகிர்:

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடாததில் அண்ணாமலைக்கு எவ்வித வருத்தமும் இல்லை என்று பாஜக தேசிய தலைவர் நிதின் நவீன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி உள்பட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. இவற்றில், அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரியில் மட்டுமே தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி இருக்கும் நிலையில், மீதமுள்ள மூன்று மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்க பாஜக தீவிரப் பணியாற்றி வருகின்றது.

இந்த நிலையில், தமிழ்நாடு தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை. கோவையில் அவருக்கு தொகுதி ஒதுக்கப்படாததால் அவர் போட்டியிட மறுத்துவிட்டதாக தகவல்கள் பரவின.

Advertisement

இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு நிதின் நவீன் அளித்த நேர்காணலின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது:

“அண்ணாமலை மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். அவர் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றுள்ளார். அவருக்கு எந்தவிதமான மனவருத்தமும் இல்லை. கட்சி ஒரு அணியாகத் தேர்தலை எதிர்கொண்டுள்ளது” என்றார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “நான் போட்டியிடப்போவதில்லை என்பதை, கட்சித் தலைமையிடம் நான் ஏற்கனவே எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்திருந்தேன். எனவே, எனக்குப் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டது என்பது உண்மையல்ல. தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று நானே முடிவெடுத்தேன் என்பதே உண்மை" என்று அண்ணாமலை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், தமிழ்நாடு தேர்தல் குறித்த கேள்விகளுக்கு அவர் பதிலளித்ததாவது”

”தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் உங்களை ஆச்சரியப்படுத்தும். திமுகவின் ஊழலுக்கு மக்கள் வலுவான பதிலடி கொடுப்பார்கள். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும். அங்கு ஒரு மாற்றம் நிகழப் போவதற்கான உறுதியான அறிகுறிகள் தென்படுகின்றன.

அனைத்து மாநிலங்களிலும் தொடக்கத்திலிருந்து பாஜக ஆட்சி அமைக்கவில்லை என்பதை திமுக உணர்ந்துகொள்ள வேண்டும். வடகிழக்கு மாநிலங்களில் வளர்ச்சியை முன்னெடுத்த பிறகே எங்கள் ஆட்சி அமைக்கப்பட்டது. கேரளத்தில் மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் ஒருபோதும் வளர்ச்சியை அணுகியதில்லை.

எங்கு வாக்குகள் கிடைக்கின்றனவோ, அங்கு மட்டுமே வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் சிந்தனையாக இருந்தது. ஆனால், வாக்களித்தார்களோ, இல்லையோ, ஒவ்வொரு குடிமகனுக்குள் வளர்ச்சியைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவு கொண்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

summary

Annamalai has no regrets about not contesting the election! — BJP National President

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments