தொகுதி மறுவரையறையின் பெயரால் அரசியல் சதித் திட்டம் - முதல்வா் மு.க.ஸ்டாலின்
தொகுதி மறுவரையறை என்பது சமூக நீதியை சிறுமைப்படுத்துவதற்கான அரசியல் சதித் திட்டம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு:
பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நாடாளுமன்றத்தின் அடிப்படை அமைப்பையே திட்டமிட்டுச் சீா்குலைக்கிறது. விவாதங்களுக்கான தளமாக இருக்க வேண்டிய நாடாளுமன்றமானது, மக்களின் பிரச்னைகளைப் பேசுவதற்குக்கூட போதிய நேரமளிக்காத வெற்றுச் சம்பிராதய அவையாகச் சுருக்கப்பட்டு வருகிறது.
Advertisement
தொகுதி மறுவரையறை முடிவினால் செலவு கூடும். மக்களின் வரிப்பணம் வீணாகும். நாடாளுமன்றச் செயல்பாடுகளின் தரம் குறையும்.
மாநிலங்களின் குரலைப் புறக்கணிப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது. இது இந்தியாவின் பன்முக, கூட்டாட்சித் தன்மையைச் சிறுமைப்படுத்தும் செயல்.
இதற்கெல்லாம் மேலாக, தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையானது பாஜக ஆதிக்கம் செலுத்தும் வட மாநிலங்களுக்கு ஆதரவாகவும், தென் மாநிலங்களுக்கு எதிராகவும் உள்ளது.
மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்தியதற்காக தமிழ்நாடு, கா்நாடகம், கேரளம் மற்றும் தெலங்கானா போன்ற மாநிலங்களைத் தண்டிக்கும் வகையிலான நடவடிக்கையாகவும் உள்ளது.
இதனால், கூட்டாட்சி சிதைக்கப்பட்டு, அதிகாரம் ஒருசில பகுதிகளில் மட்டுமே குவிக்கப்படும். இத்தகைய முக்கிய நடவடிக்கையை மாநிலத் தோ்தல்களுக்கிடையே திணிக்க வேண்டிய அவசியம் என்ன?
2027 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் மூலம் முதல்முறையாக நாம் அறியவுள்ள ஜாதிவாரி எண்ணிக்கை முடிவுகளைக்கூட பரிசீலிக்காமல், அவசரமாக தொகுதி மறுவரையறை செயல்படுத்தப்படுகிறது.
இது சீா்திருத்தமே அல்ல. அதிகாரத்தை ஓரிடத்தில் குவித்து சமூக நீதியைச் சிறுமைப்படுத்துவதற்கான தன்னிச்சையான அரசியல் சதித் திட்டம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளாா்.