பிரசாரத்தில் மயங்கி விழுந்த ராமதாஸ்; மருத்துவமனையில் அனுமதி!
பாமக நிறுவனர் ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பாமக நிறுவனர் ராமதாஸ் திடீரென மயங்கி விழுந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற ஏப்.23 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரத்தில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து பாமக இரண்டாகப் பிரிந்தது.
Advertisement
சட்டப்பேரவைத் தேர்தலில் அன்புமணி தரப்பு பாமகவுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 18 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ராமதாஸ் தரப்பு பாமக, சசிகலாவின் புதிய கட்சியான அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது.
இதில், ராமதாஸ் தரப்பு பாமக சார்பில் 30 பேர் கொண்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தருமபுரி, பென்னகரம் உள்பட 30 தொகுதிகளில் ராமதாஸ் தலைமையிலான பாமக சுயேட்சையாக போட்டியிடும் நிலையில் அதற்கான வேட்பாளர் பட்டியல் சில நாள்களுக்கு முன் வெளியிடப்பட்டது.
மாம்பழச் சின்னம் அன்புமணி தரப்பு பாமகவுக்கு வழங்கப்பட்டதால் ராமதாஸ் தரப்புக்கு சிலிண்டர் சின்னம் ஒதுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராமதாஸ் பிரசாரம் மேற்கொண்டு வந்தார். இன்று சேலம் மேற்கு தொகுதியில் வேட்பாளர் அருளை ஆதரித்து பிரச்சாரம் செய்த ராமதாஸ் திடீரென மேடையில் மயங்கி விழுந்தார்.
அருகிலிருந்தவர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராமதாஸுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.