விஜய்யுடன் இருக்கும் திருடர்தான் ஜன நாயகனை வெளியிட்டுள்ளார்! சரத்குமார்
பெரம்பூர் தே.ஜ. கூட்டணி வேட்பாளரை ஆதரித்து சரத்குமார் பிரசாரம்.
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யுடன் இருப்பவர்தான் ஜன நாயகன் படத்தை வெளியிட்டியிருக்கிறார் என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும் நடிகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக சென்னை பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளர் திலகபாமாவை ஆதரித்து சரத்குமார் திங்களன்று மாலை பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
பாஜகவின் பிரசார வாகனத்தில் இருவரும் ஒன்றாக நின்றபடி எம்.கே.பி. நகர், சின்னாண்டி மடம் புதிய பாலம், பி.வி. ரௌண்டான உள்ளிட்ட இடங்களில் வாக்கு சேகரித்தனர்.
Advertisement
அப்போது மக்களிடையே சரத்குமார் பேசியதாவது:
”தவெக தலைவர் விஜய்யை பற்றி ஏன் விமர்சிக்க தயங்குகிறீர்கள், இரு கட்சிகளுக்குள்ளும் தொடர்பு இருக்கிறதா என்று செய்தியாளர்கள் என்னிடம் கேட்கின்றனர்.
யாரிடமும் கள்ள தொடர்பு வைத்துக்கொள்வது பாஜகவின் வழக்கம் இல்லை. அவர் யாருடன் தொடர்பு வைத்திருக்கிறார் என்று எனக்கு தெரியாது.
எந்த கொள்கையும், கோட்பாடும் இல்லாதவர் விஜய். 41 பேர் இறந்தபோது அவர்களது வீட்டிற்கு சென்று துக்கம் விசாரிக்காமல், தனது இடத்திற்கு வரவழைத்து துக்கம் விசாரித்த உலகில் ஒரே தலைவர் தவெக தலைவர் விஜய்தான்.
தலைவன் என்பவன் எந்த ஒரு சோதனை காலம் வந்தாலும் அருகில் இருந்து கவனித்து கொள்ள வேண்டும்.
ஜன நாயகன் படம் சட்டவிரோதமாக வெளியானதற்கு மத்திய அரசை குற்றம் சொல்கிறார், அவருடன் இருக்கும் ஒரு திருடர்தான் அதனை வெளியிட்டிருக்கிறார்.
அனைத்திலும் அரசியல் காண வேண்டும் என்று பொய் பிரசாரம் செய்து வரும் தவெக, அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும், நாட்டுக்கு அப்போதுதான் நல்லவர்கள் வருவார்கள், இளைஞர்களை அவர் திசை திருப்ப வேண்டாம்” எனப் பேசினார்.