காங்கிரஸ் வேட்பாளர்கள் புறக்கணிப்பு! கோவையில் திமுகவுக்கு மட்டும் ப. சிதம்பரம் பிரசாரம்!
கோவையில் திமுகவுக்கு மட்டும் ப. சிதம்பரம் பிரசாரம் செய்தது பற்றி...
கோவை: கோவை வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரத்தை சந்திக்காமல் அக்கட்சியின் வேட்பாளர்கள் புறக்கணித்த நிலையில், திமுகவுக்கு மட்டும் அவர் பிரசார செய்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகின்றது.
கோவை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிங்காநல்லூர் தொகுதியில் ஸ்ரீநிதியும், கவுண்டம்பாளையம் தொகுதியில் சூரிய பிரகாஷும் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.
Advertisement
இந்த நிலையில், கோவைக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் வந்த முன்னாள் மத்திய அமைச்சடும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம், கோவை தெற்கில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கும், சூலூரில் திமுக வேட்பாளர் தளபதி முருகேஷனுக்கும் ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார்.
காங்கிரஸ் போட்டியிடும் கவுண்டம்பாளையம் மற்றும் சிங்காநல்லூர் தொகுதிகளில் ப. சிதம்பரம் பிரசாரம் செய்யாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திமுக சார்பில் பிரசாரத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாலும், தன்னுடைய ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்காததாலும் அவர் பிரசாரம் செய்யவில்லை என்று கட்சியின் ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
மறுபுறம், காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரத்தை மரியாதை நிமித்தமாககூட வேட்பாளர்கள் இருவரும் சந்திக்காமல் புறக்கணித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூறுகையில், நேற்று பிற்பகல் கோவை வந்த ப. சிதம்பரம் பிற்பகல் 3 முதல் 4.30 மணி வரை ஹோட்டலில்தான் இருந்தார். இரண்டு இளம் வேட்பாளர்களும் மூத்த தலைவரை சந்திக்காதது தவறான போக்கு. அவர் இன்றும் கோவையில்தான் உள்ளார். அவர் புறப்படுவதற்குள் வேட்பாளர்கள் சந்தித்தால், மூத்த நிர்வாகிகள் அவர்களுக்கு ஆதரவாக பணியாற்ற வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.