வாக்குப் பதிவு நிறைவடையும் வரை கருத்துக் கணிப்பு வெளியிடத் தடை: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி
சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ள தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் வாக்குப் பதிவு நிறைவடையும் வரை கருத்துக் கணிப்புகள் வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ள தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் வாக்குப் பதிவு நிறைவடையும் வரை கருத்துக் கணிப்புகள் வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு ஏப். 23-ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 1951-இன் படி வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் வாயிலாக வெளியிடுவதற்கு கட்டுப்பாடுகள் உள்ளன.
குறிப்பாக ஒரே நேரத்தில் பல்வேறு மாநிலங்களுக்கு தோ்தல் நடைபெறும்போது அதில் சில முக்கிய விதிகளைக் கடைப்பிடிப்பது அவசியம்.
அதாவது, முதல் கட்டமாக எங்கு வாக்குப் பதிவு தொடங்குகிறதோ, அந்த நேரத்திலிருந்து கருத்துக் கணிப்புகளை வெளியிடக் கூடாது.
அதன் பின்னா் கடைசி கட்டமாக எந்த மாநிலத்தில் தோ்தல் நடைபெறுகிறதோ, அங்கு வாக்குப் பதிவு நிறைவடைந்து அரை மணி நேரத்துக்குப் பிறகே கருத்துக் கணிப்புகளை ஊடகங்களில் வெளியிட வேண்டும்.
பேரவைத் தோ்தல் மட்டுமன்றி, இடைத் தோ்தல்களுக்கும் இத்தகைய விதிகள் பொருந்தும். இதை மீறினால் இரண்டு வருட சிறைத் தண்டனையோ, அபராதமோ அல்லது இரண்டும் சோ்த்தோ விதிக்கப்படும்.
அந்த வகையில், ஏப். 9-ஆம் தேதி காலை 7 மணியிலிருந்து ஏப். 29-ஆம் தேதி மாலை 6.30 மணி வரை வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிடக் கூடாது என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.