பிரசாரத்தின்போது தண்டவாளத்தில் படுத்த மன்சூர் அலிகான்! ஏன்?
மன்சூர் அலிகான் தண்டவாளத்தில் படுத்தது பற்றி...
லால்குடி தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான், பிரசாரத்தின்போது திடீரென்று தண்டவாளத்தில் படுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் லால்குடி தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட நடிகர் மன்சூர் அலிகான் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், லால்குடி தொகுதியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கல்லக்குடி ரயில் நிலையத்தில் இன்று காலை மன்சூர் அலிகான் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது தண்டவாளத்தில் இறங்கிய மன்சூர் அலிகான், குறுக்கே படுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் போராட்டத்தின் நினைவாக படுத்ததாக தெரிவித்தார்.
முன்னதாக, நேற்று வேட்புமனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான், ”முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடம் லால்குடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டேன். யாரும் தராததால் சுயேச்சையாகப் போட்டியிடுகிறேன்” எனத் தெரிவித்தார்.
இவர், 1999 முதல் 4 முறை மக்களவைத் தேர்தலிலும், ஒரு முறை சட்டப்பேரவைத் தேர்தலிலும் வெவ்வேறு தொகுதிகளில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.