காங்கிரஸ் முதுகில் குத்திவிட்டது; விரைவில் வருந்தும்! திமுக செய்தித் தொடர்பாளர்
காங்கிரஸ் குறித்து சரவணன் அண்ணாதுரை கருத்து...
காங்கிரஸ் முதுகில் குத்திவிட்டது என்று திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. ஆட்சி அமைக்க இன்னும் 11 பேரின் ஆதரவு தேவைப்படுகிறது.
இதற்காக திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகளிடம் தவெக ஆதரவு கேட்டதாக தகவல்கள் வெளியாகின. காங்கிரஸும் ஆதரவு கொடுக்க முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது.
Advertisement
இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த சரவணன் அண்ணாதுரை கூறியதாவது:
”பாஜகவும் ஆர்எஸ்எஸும் ராகுல் காந்தியை இழிவாகப் பேசி, கேலி செய்தபோது அவரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியவர் மு.க. ஸ்டாலின்தான். அது ஒரு துணிச்சலான முடிவாகும்.
அங்கிருந்துதான் ராகுல் காந்தியின் வளர்ச்சிப் பயணம் தொடங்கியது. 2024-ஆம் ஆண்டில் மேலும் உயர்ந்தது. இதற்கெல்லாம் காரணம், களத்தில் திமுக மேற்கொண்ட கடின உழைப்பாகும். அதனால்தான் அவர்களால் இந்த ஐந்து இடங்களை வெல்ல முடிந்தது.
காங்கிரஸின் இந்த முடிவு ’முட்டாள்தனமான’ முடிவு. தவெக பெரும்பான்மையை எட்ட 11 இடங்கள் தேவைப்படுகின்றன. 47 இடங்களைக் கைப்பற்றியுள்ள அதிமுக நிபந்தனையற்ற ஆதரவை வழங்கத் தயாராக உள்ளது. நீங்கள் விஜய்யாக இருந்தால் அதிமுக பேச்சைக் கேட்பீர்களா? அல்லது காங்கிரஸ் பேச்சைக் கேட்பீர்களா? எனவே, காங்கிரஸ் கட்சி மிகத் தவறான ஒரு முடிவை எடுத்துவிட்டதாக நான் கருதுகிறேன். மிக விரைவில் இந்த முடிவை எண்ணி வருந்த நேரிடும்.
காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை மாற்றி கொண்டு தவெகவுக்கு ஆதரவளிக்க முன்வந்ததால் முதுகில் குத்தும் செயல் என்று விமர்சிக்கிறோம். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பிடம் இருந்து தமிழ்நாட்டைக் காப்பதற்காகவே இந்த முடிவை எடுத்ததாக கூறுவது உணர்ச்சிவசப்பட்ட முடிவாகும். தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு ஒரே நாளில் நம்பகத்தன்மையற்ற முறையில் காங்கிரஸ் நடந்துகொண்டுள்ளது. அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், உத்தவ் தாக்கரே மற்றும் பிற தலைவர்களின் மனதில் இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்? நாங்கள் ஒருபோதும் காங்கிரஸ் கட்சியை ஏமாற்றியதோ அல்லது கைவிட்டதோ இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.