திமுகவின் முதுகில் குத்திய காங்கிரஸ்: பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுகவை காங்கிரஸ் முதுகில் குத்தியதாக பிரதமர் மோடி விமர்சனம்
தமிழகத்தில் திமுகவை காங்கிரஸ் முதுகில் குத்தியதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
பெங்களூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது, "எந்தவொரு காங்கிரஸ் அரசும் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்ததில்லை. அரசு அமைந்த சில மாதங்களிலேயே காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரான அலை வீசத் தொடங்கும்.
ஏனெனில், அவர்களுக்கு துரோகம் செய்ய மட்டுமே தெரியும். அவர்கள் பொய்யர்கள். அவர்களின் வாக்குறுதிகளும் பொய்யானவை.
Advertisement
Advertisement
தற்போது தமிழ்நாட்டின் நிலையைப் பாருங்கள். 25 முதல் 30 ஆண்டுகளாக திமுகவுடன் காங்கிரஸ் நெருங்கிய உறவில் இருந்தது. பலமுறை, காங்கிரஸை நெருக்கடிகளிலிருந்து திமுக காப்பாற்றியிருக்கிறது. உண்மையில், 2014 முன்பு காங்கிரஸ் ஆட்சியிலிருந்தபோது, திமுகவால்தான் காங்கிரஸ் தப்பித்து வந்தது.
இருப்பினும், காங்கிரஸின் முன்னேற்றத்துக்காக தொடர்ந்து உழைத்து வந்த அதே திமுக, தற்போது அரசியல் சூழல் மாற்றத்தால் துரோகத்துக்கு ஆளாகிவிட்டது.
அதிகார வெறிகொண்ட காங்கிரஸ், கிடைத்த முதல் வாய்ப்பிலேயே திமுகவின் முதுகில் குத்திவிட்டது. இப்போது, தன்னை அரசியல்ரீதியாகத் தக்கவைத்துக் கொள்ள, ஒட்டுண்ணி காங்கிரஸ் கட்சிக்கு மற்றொரு கட்சி தேவைப்படுகிறது" என்று தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களைப் பெற்ற நிலையில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி இரண்டாமிடத்துக்கு எதிர்க்கட்சி நிலையை அடைந்தது. இருப்பினும், ஆட்சியமைப்பதற்கான 118 இடங்களை தவெக பெறாததால், தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனிடையே, திமுக கூட்டணியிலிருந்த காங்கிரஸ், கூட்டணியிலிருந்து விலகி தவெகவுடன் கைகோர்த்தது.
இந்த நிலையில், முதல்வராக விஜய் இன்று பதவியேற்ற விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார்.
Backstabbing comes naturally to the Congress. See what happened in Tamil Nadu, says PM Modi
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.