பேரவைக்கு வந்தும் சி.வி. சண்முகம் பதவியேற்கவில்லை!
பேரவைக்கு வந்தும் சி.வி. சண்முகம் பதவியேற்காதது பற்றி...
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் இன்று காலை சட்டப்பேரவைக்கு வருகை தந்த நிலையில், பதவியேற்பதற்கு முன்னதாகவே வெளியேறிவிட்டார்.
பேரவைத் தோ்தலில் அதிமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்ட நிலையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பதவி விலகக் கோரி கட்சிக்குள் முக்கிய நிர்வாகிகள் போர்க் கொடி தூக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இது ஒருபுறம் இருக்க, கட்சியின் பொதுச் செயலரான எடப்பாடி கே. பழனிசாமியின் ஒப்புதல் இல்லாமல், சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவராக எஸ்.பி. வேலுமணி தோ்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Advertisement
இந்த நிலையில், 17-வது சட்டப்பேரவையின் முதல் நாளான இன்று, அனைத்து உறுப்பினர்களும் எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்று வருகின்றனர்.
இன்றைய கூட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் சில எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவைக்கு வந்த நிலையில், எஸ்.பி. வேலுமணி தலைமையில் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் வருகை தந்தனர்.
இதனிடையே, சட்டப்பேரவைக்கு தனியாக வருகை தந்த சி.வி. சண்முகம், சில நிமிடங்களிலேயே வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. பதவியேற்பதற்கு சி.வி. சண்முகத்தை அழைத்தபோது அவையில் அவர் இல்லாததால் அடுத்த உறுப்பினர் அழைக்கப்பட்டார்.
அவைக்கு வந்தும் சி.வி. சண்முகம் பதவியேற்காமல் வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.