திமுக ஆதரவோடு முதல்வராக நினைத்தார் இபிஎஸ்: முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்
இபிஎஸ் குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் குறித்து...
திமுக ஆதரவோடு எடப்பாடி பழனிசாமி முதல்வராக நினைத்தார் என்று முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி மோதல் வலுவடைந்துள்ள நிலையில், சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமியை நியமிக்க 17 எம்எல்ஏக்களும், எஸ்.பி.வேலுமணியை நியமிக்க 30 எம்எல்ஏக்களும் தனித்தனி அணிகளாக இடைக்கால சட்டப்பேரவைத் தலைவரிடம் திங்கள்கிழமை கடிதம் கொடுத்தனர்.
இது குறித்து, சென்னை எம்.ஆர்.சி. நகரில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் இன்று(மே 12) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தேர்தல் முடிவடைந்த பிறகு அதிமுக பொதுச்செயலர் எடப்ப்பாடி பழனிசாமி சில முன்மொழிவுகளை வைத்தார். நாங்கள் எதிர்த்த திமுக ஆதரவோடு பழனிசாமி முதல்வராக தேர்வு செய்யப்படவுள்ளதாகக் கூறினார்.
Advertisement
திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்து 50 ஆண்டுகளுக்கும்மேல் அரசியல் செய்து வருகிறோம். திமுகவுடன் இணைந்தால் அதிமுக இல்லாமல் போய்விடும் என்று நாங்கள் கூறினோம்.
அதிமுக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக எஸ்.பி. வேலுமணி, துணைத் தலைவராக ஹரி, கொறடாவாக சி.விஜயபாஸ்கர், செயலாளராக காமராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதிமுக எப்போதும் உடையாது, அதற்கு நாங்கள் காரணமாக இருக்க மாட்டோம், கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து இருக்கிறோம். அதிமுக காப்பற்றப்பட வேண்டும். ஆகையால், எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுக்குழுவை விரைந்து கூட்டி ஆலோசிக்க வேண்டும்.
அதிமுக ஏன் தோற்றது என்பதை ஆராய்ந்து நல்ல முடிவை எடுக்க வேண்டும். அதிமுக இனி எந்தக் கூட்டணியிலும் இல்லை, தேர்தலுக்கு முந்தைய கூட்டணியிலும் இல்லை” என்றார்.