தேர்தல் பார்வையாளர்களின் நடவடிக்கைக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் தடை
மேற்கு வங்கத்தில் பேரவைத் தேர்தல் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக திரிணமூல் காங்கிரஸ் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்பட பலர் மீது தேர்தல் ஆணையத்தின் காவல் பார்வையாளர்கள் மேற்கொண்ட நடவடிக்கைக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் புதன்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 152 தொகுதிகளுக்கு ஏப்.23}ஆம் தேதி முதல் கட்டமாக பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி., எம்எல்ஏக்கள் உள்பட 800}க்கும் மேற்பட்டோரை "இடையூறு ஏற்படுத்தியவர்கள்' என வகைப்படுத்தி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணைய காவல் பார்வையாளர்கள் கடந்த ஏப்.21}ஆம் தேதி உத்தரவிட்டனர்.
Advertisement
இந்த உத்தரவை எதிர்த்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஜோய் பால் தலைமையிலான அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞரும் திரிணமூல் காங்கிரஸ் எம்பியுமான கல்யாண் பானர்ஜி, "தேர்தல் நடைமுறைக்கும் வாக்காளர்களுக்கும் இடையூறு ஏற்படுத்துவதாக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் என மொத்தம் 800}க்கும் மேற்பட்டோர் மீது தேர்தல் ஆணையத்தின் காவல் பார்வையாளர்கள் கண்மூடித்தனமாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கடந்த ஏப்.21}ஆம் தேதி பிறப்பித்த உத்தரவு அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமையான தனிமனித சுதந்திரத்தை பாதிப்பதாகும்' என்றார்.
இதைக் கேட்ட நீதிபதிகள் அமர்வு, தேர்தல் ஆணைய காவல் பார்வையாளர்கள் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. மேலும், "இடையூறு ஏற்படுத்தியவர்கள் என தேர்தல் ஆணைய காவல் பார்வையாளர்கள் வெளியிட்ட பட்டியலில் உள்ளோர் பாரதிய நியாய சம்ஹிதா சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் அல்லது பிற சட்டங்களின்கீழ் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அவர்களிடம் விசாரணை நடத்த எவ்வித தடையும் இல்லை' என நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.