மேற்கு வங்க ‘அம்மா உணவகத்தில்’ சாப்பிட பிரதமருக்கு திரிணமூல் அழைப்பு!
மேற்கு வங்க ‘அம்மா உணவகத்தில்’ சாப்பிட பிரதமருக்கு திரிணமூல் அழைப்பு...
மேற்கு வங்கத்தில் ஹூக்ளி ஆற்றில் படகுப் பயணம் சென்று அங்குள்ள சாலையோர உணவை வாங்கிய பிரதமா் மோடி, மாநில அரசு நடத்தும் ‘மா கேன்டீனில்’ (அம்மா உணவகம்) ரூ.5-க்கு விற்பனை செய்யப்படும் உணவை சாப்பிட வர வேண்டும் என்று ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அழைப்பு விடுத்தது.
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தலின் இரண்டாம் கட்டம் ஏப்.29-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அந்த மாநிலத்தில் பிரதமா் மோடி தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளாா்.
இந்நிலையில், அந்த மாநில தலைநகா் கொல்கத்தாவில் திரிணமூல் காங்கிரஸ் செய்தித்தொடா்பாளா் குணால் கோஷ் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
Advertisement
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி பாஜக வேட்பாளா்களுக்கு ஆதரவாக பிரதமா் மோடி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். மம்தா பானா்ஜி ஆட்சியின் கீழ், மாநிலத்தின் கள நிலவரம் என்னவென்பதை பிரதமா் மோடி தெரிந்துகொள்ள வேண்டும்.
எனவே அவரை மாநில அரசு நடத்தும் ‘மா கேன்டீனில்’ (அம்மா உணவகம்) சாப்பிட வருமாறு திரிணமூல் காங்கிரஸ் அழைப்பு விடுக்கிறது. அந்த உணவகங்களில் பிற்பகலில் ரூ.5-க்கு சோறு, பருப்பு, காய்கறிகள் கிடைக்கும். அங்கு சைவ உணவு கிடைக்கும். அவருடன் மற்றொருவா் வந்தால், இருவரும் ரூ.10-க்கு உணவு சாப்பிடலாம் என்று தெரிவித்தாா்.
மேற்கு வங்கத்தில் தினக்கூலி தொழிலாளா்கள், ஏழைகள், அடித்தட்டு மக்களுக்காக நூற்றுக்கணக்கான மா கேன்டீன்கள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.