மமதா தோல்வி அடையப்போகும் விரக்தியில் உள்ளார்: சுவேந்து அதிகாரி
மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி தோல்வி அடையப்போகும் விரக்தியில் உள்ளதாக சுவேந்து அதிகாரி தெரிவித்தது குறித்து...
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடையப்போகும் விரக்தியில் உள்ளதாக பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி வெள்ளிக்கிழமை (மே 1) தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 4 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதனிடையே, தேர்தல் ஆணையத்தின்மீது தொடர் குற்றச்சாட்டுகளை அடுக்கி வரும் மமதா, தான் போட்டியிடும் பவானிபூர் தொகுதியின் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்துக்கு இன்று (மே 1) திடீரெனச் சென்றார். அங்கு சுமார் 4 மணி நேரம் இருந்துள்ளார்.
Advertisement
மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யவுள்ளதாக குற்றம்சாட்டிய அவர், அப்படி யாரேனும் செய்ய முயன்றால் கடுமையான போராட்டத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து பேசிய அந்த மாநிலத்தின் பாஜக தலைவரும் பவானிபூரில் மமதாவை எதிர்த்துப் போட்டியுடும் வேட்பாளருமான சுவேந்து அதிகாரி, “மமதா செய்வது அப்பட்டமான நாடகத்தைக் குறிக்கிறது. கழிவறை போன்ற வசதிகள் கொண்ட வாகனத்தில் வாக்கு எண்ணும் மையத்துக்கு விரைந்து சென்று, அங்கு நான்கு மணி நேரம் தங்கியிருந்தார். அவர் தேர்தல் முடிவை மாற்ற விரும்பினாலும், அது ஒருபோதும் நடக்காது.
மேலும், நீண்ட காலம் தங்குவதற்கு முறையான இடம் இல்லாததால், அவர் திரும்பிச் செல்ல வேண்டியிருந்தது.
அவருடைய திட்டம் என்ன? அவர் செய்வது எதுவும் சரியில்லை. அவர் தோல்வி அடைவார் என்பதால் விரக்தியில் இருக்கிறார். மேற்கு வங்கத்தில் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. அது அனைவருக்கும் தெரியும். சரியான புள்ளிவிவரங்கள் மே 4 ஆம் தேதிக்குள் தெரியவரும். ஆனால், ஒரு பாஜக அரசு வரப்போகிறது” எனத் தெரிவித்தார்.