மமதாவை வீழ்த்திய பவானிபூர் தக்க வைப்பு; நந்திகிராம் தொகுதி ராஜிநாமா! - முதல்வர் சுவேந்து அதிகாரி அறிவிப்பு!
மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜியை வீழ்த்தி வெற்றி பெற்ற பவானிபூர் தொகுதியைத் தக்க வைக்கிறார் முதல்வர் சுவேந்து அதிகாரி...
மேற்கு வங்கத்தில் முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜியை வீழ்த்தி வெற்றி பெற்ற பவானிபூர் தொகுதியைத் தக்க வைத்தார் முதல்வர் சுவேந்து அதிகாரி.
மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அரசை வீழ்த்தி முதல்முறையாக பாஜக ஆட்சி அமைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, பாஜக அரசின் முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றுக் கொண்டார். மேலும், பவானிபூர் மற்றும் நந்திகிராம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட சுவேந்து அதிகாரி இவ்விரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.
Advertisement
இத்துடன், பவானிபூர் தொகுதியில் மமதா பானர்ஜியை எதிர்த்து போட்டியிட்ட சுவேந்து அதிகாரி 15,105 வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் புதன்கிழமை (மே 13) பதவியேற்றுக்கொண்டனர்.
அப்போது, நந்திகிராம் தொகுதியை ராஜிநாமா செய்வதாகவும், மமதாவை வீழ்த்தி வெற்றி பெற்ற பவானிபூர் தொகுதியைத் தக்கவைப்பதாகவும் முதல்வர் சுவேந்து அதிகாரி அறிவித்துள்ளார். இதையடுத்து, பவானிபூர் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக அவர் பதவியேற்றுக்கொண்டார்.
இதுபற்றி, முதல்வர் சுவேந்து அதிகாரி கூறுகையில்,
“நந்திகிராம் தொகுதியில் இடைத்தேர்தல் மூலம் வேறொருவர் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். ஆனால், அடுத்த 5 ஆண்டுகளில் அங்குள்ள மக்கள் நான் அங்கு இல்லாததை உணரும் வகையில் நடந்துகொள்ள மாட்டேன்.
நந்திகிராம் மக்களுக்கு நான் அளித்த அனைத்து வளர்ச்சி வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன்” எனக் கூறியுள்ளார்.