சந்திரநாத் ராத் கொலை வழக்கில் காவல்துறை சரியான திசையில் செல்கிறது: சுவேந்து அதிகாரி
சந்திரநாத் ராத் கொலை வழக்கில் காவல்துறை சரியான திசையில் செல்கிறது என்று சுவேந்து அதிகாரி தெரிவித்தது குறித்து...
பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி, அவருடைய உதவியாளர் சந்திரநாத் ராத் கொலை வழக்கில் காவல்துறை சரியான திசையில் செல்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பவானிபூர் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜியை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றிபெற்ற பாஜக தலைவர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் புதன்கிழமை (மே 6) சுட்டுக்கொல்லப்பட்டார்.
வடக்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்தில் உள்ள தோஹாரியா பகுதியில் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சந்திரநாத் ராத் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
Advertisement
இந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களுடைய கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில், காவல்துறை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றது.
இதுகுறித்து பேசிய சுவேந்து அதிகாரி, “ இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர். நான் காவல்துறை தலைமை இயக்குநருடன் (டிஜிபி) பேசினேன். அவர்கள் ஆதாரத்தைத் திரட்டியுள்ளனர். சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்களை காவல்துறையினரால் கைது செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன். சிஐடி மற்றும் சிறப்புப் புலனாய்வுக் குழுவினரும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், காவல்துறையினர் சரியான திசையில் முன்னேறி வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.
தேர்தலுக்குப் பிந்தைய இதுமாதிரியான நிகழ்வுகள் மேற்கு வங்கத்தில் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்து வருவது குறிப்பிடத்தக்கது.