சென்னையில் திருட்டு ஸ்கூட்டரில் பயணம் செய்த மகளால் திருட்டு தந்தை பிடிபட்ட சுவாரஸ்ய சம்பவம் புதன்கிழமை நடந்துள்ளது.
சென்னை புறநகர் பகுதியில் அமைந்துள்ள மணலி பாரதியார் தெருவைச் சேர்ந்த கார்த்திக் (33), சாத்தாண்கூடுவிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் சிவராத்திரியன்று கோயிலுக்கு சென்றுள்ளார். இரவு 11 மணிக்கு திரும்பி வந்த போது ஸ்கூட்டர் திருடப்பட்டது தெரியவந்தது.
இந்நிலையில், ஆட்டோவில் அவரது மனைவி மற்றும் குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு, மணலி காவல்நிலையத்தில் புகார் அளிக்க அதே ஆட்டோவில் வந்துள்ளார். அப்போது 14 வயது பெண் தன்னுடைய ஸ்கூட்டரை ஓட்டிச் சென்றதை கண்டு ஆட்டோவில் பின்தொடர்ந்தார்.
அப்போது அவரை பிடித்து விசாரிக்கையில், அந்த ஸ்கூட்டர் தனது தந்தையுடையது என்று அவர் வாதாடியுள்ளார். பின்னர் போலீஸார் நடத்திய விசாரணையில், தனது தந்தை ஒரு ஆட்டோ ஓட்டுநர் என்றும், அவரது ஸ்கூட்டரை விட்டுவிட்டு சென்றதாக கூறியுள்ளார். இதையடுத்து சரவணன் (35) என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவர் இருசக்கர வாகனங்களை திருடி விற்பனை செய்து வருவது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த திருட்டு வாகனங்களில் ஒன்றை அவரது மகள் எடுத்து ஓட்டிச் சென்றதால், திருட்டு தந்தை கைது செய்யப்பட்டு, அவரிடம் இருந்து 4 இருசக்கர வாகனங்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சரவணன், நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.