27.4.1976: தமிழ் நாட்டில் 98.3% கிராமங்கள் மின் வசதி பெற்றன
தமிழ் நாட்டில் 98.3% கிராமங்கள் மின் வசதி பெற்றன...
மதுரை, ஏப், 23 - தமிழ்நாட்டில் சில ஜாகீர் கிராமங்கள் தவிர இதுவரை 98.3 சத கிராமங்கள், சிறிய கிராமங்கள் மின்சார வசதி பெற்றுள்ளது. மீதி கிராமங்கள் சீக்கிரத்தில் மின்சார வசதியைப் பெறும்.
தமிழ்நாடு மின்சார போர்டு தலைவர் ராஜேந்திரன் இன்று இங்கு நிருபர்களிடம் இத் தகவலை தெரிவித்தார்.
மின்சக்தியை நன்கு உபயோகிக்க கிராமிய மின்வசதி திட்டம் இனி இலாகா பூர்வமாக அமல் நடத்தப்படும் என்றும், அதற்கு வேண்டிய பொருள்கள் யாவும் இலாகாவிலேயே தயாரிக்கப்படுகின்றன என்றும் கூறினார்.
Advertisement
தூத்துக்குடி அனல் மின் நிலைய முதல் பிரிவு (210 மெகாவாட்) 1978 டிசம்பரில் செயல்படத் துவங்கும். இதே உற்பத்தித் திறனுள்ள 2-வது பிரிவு 1979 செயல்படும் என்றும் தெரிவித்தார்.
எண்ணூர் அனல் மின்நிலைய 5 பிரிவுகளும் இதுவரை இல்லாத அளவு 365 மெகாவாட் உற்பத்தி செய்வதாகக் கூறினார்.
கங்கை நீர் பகிர்வு - தொழில்நுட்ப பேச்சு நடக்கும்
புது டில்லி, ஏப் 26- கங்கை நீரைப் பகிர்ந்து கொள்ளுவது சம்பந்தப்பட்ட எல்லா செய்திக் குறிப்புகளையும் ஆராய்ந்து மதிப்பீடு செய்வதற்கு உயர்மட்ட குழுக்களை இந்தியாவும், வங்காள தேசமும் பரஸ்பரம் அனுப்பிட இருக்கின்றன.
இந்தியா ஒரு குழுவை நாளை டாக்காவுக்கு அனுப்பவிருக்கிறது. இக்குழுவின் பயணம் முடிந்ததும், வங்காள தேசம் இதே போல ஒரு குழுவை இந்தியாவுக்கு அனுப்பும்.
மத்திய பாசனத் துறை கூடுதல் காரியதரிசி சி.சி. படேல் தலைவராகவும், வெளி விவகார அமைச்சகத்தில் கூடுதல் காரியதரிசியாக உள்ள ஜே.சி. அஜ்மானி உதவித் தலைவராகவும் இந்தியா அனுப்பும் குழுவில் இருப்பார்கள். இக்குழு ஏழு உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கும். இக்குழு நாளை டாக்கா செல்கிறது. ...