ஒசூரில் 3 பேருக்கு டெங்கு காய்ச்சல்!
ஒசூரில் மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டு தனியார், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒசூரில் மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டு தனியார், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒசூரில் கிருஷ்ணப்பா காலனி, அரசனட்டி, ஆவலப்பள்ளி அட்கோ என பல இடங்களில் மர்ம காய்ச்சால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.ஆவலப்பள்ளி அட்கோ பகுதியில் கவிதா (25)என்பவருக்கு கடந்த சில நாள்களாக காய்ச்சல் இருந்தது. அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்து ரத்தப் பரிசோதனை செய்ததில் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் அதே பகுதியைச் சேர்ந்த அழகப்பன் (54), பாக்யலட்சுமி (60) ஆகியோருக்கும் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு பெங்களுர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாணவி பாதிப்பு: அரசனட்டியில் பள்ளி மாணவி சத்யா, மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இங்கு சுகாதாரத் துறை எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சிலர் கூறியது:
ஒசூரில் ஒரு சில பகுதிகளில் குடிநீர்க் குழாய் உடைந்து சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளன. சுத்தமான நீரில் உற்பத்தியாகும் கொசுவால் டெங்கு பரவுகிறது. வசந்த் நகரில் ஏற்கெனவே ஒருவர் டெங்கு காய்ச்சலால் இறந்தார். மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பலர் ஒசூர் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சை பெற்று சென்ற வண்ணம் உள்ளனர்.
ஒசூர் நகராட்சியில் கொசு மருந்து அடிக்க 3 மாதங்களுக்கென ரூ. 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், கொசுக்கள் ஒழிந்தபாடில்லை.