இந்தியாவில் கொண்டாடப்படும் பல விழாக்களில் நவராத்திரி மிகவும் பிரசித்திப்பெற்றது. முக்கியமாகப் பெண்கள் இந்த ஒன்பது தினங்களும் வெவ்வேறு ரூபத்திலான அம்மனை விரதம் இருந்து கண்ணும் கருத்துமாய் வழிப்படுவார்கள்.
இதில் கஷ்டம் என்னவோ நீரிழிவு நோயளிக்குதான், பல வருடங்களாக நவராத்திரியின் போது சாப்பிடாமல் விரதம் இருந்ததால் திடீர் என்று வந்த சர்க்கரை நோயால் விரதத்தை நிறுத்துவதற்கு மனசு அனுமதிக்காது, ஆனால் அதையும் மீறி விரதம் இருக்க முடிவு செய்தால் அதற்கு உடல் அனுமதிக்காது. கை நடுக்கம், மயக்கம், நினைவிழத்தல் எனக் கொண்டுபோய் மருத்துவமனையில் படுக்க வைத்துவிடும். இதைப்போன்ற பிரச்னைக்கு தீர்வே இந்தப் பதிவு.
விழாக் காலத்தில் உங்களது மனதையும் கஷ்டப்படுத்தாமல் அதே சமயம் உடலையும் கஷ்டப்படுத்தாமல் எப்படி எச்சரிக்கையுடன் பக்குவமாக விரதம் இருப்பது என்று மருத்துவர் பங்கஜ் அகர்வால் கூறியிருப்பதைப் பார்ப்போம்;
- நீரிழிவு நோயாளிகள் நீண்ட இடைவெளியுடைய விரதங்கள் இருப்பது நல்லதல்ல, ஆகையால் குறுகிய கால இடைவெளிக்குள் உங்களது விரதத்தை முடித்துக்கொள்வது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைச் சீராக வைத்திருக்கும்.
- ரத்தத்தின் சர்க்கரை அளவு 70 மில்லி கிராமிற்கும் குறைவாகப் போனால் உடனே விரதத்தை முடித்துக்கொள்ள வேண்டும். அதையும் மீறி விரதத்தைத் தொடர்வது மிகவும் ஆபத்தானது.
- விரதம் துவங்குவதற்கு முன்பு மெதுவாகச் செரிமானம் ஆகக் கூடிய உணவுப் பொருட்களை உட்கொள்வது நீண்ட நேரத்திற்கு ரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். காய்கறிகளில் உருளைக்கிழங்கு மற்றும் சோளத்தை தவிர மற்ற அனைத்தையும் சாப்பிடலாம்.
- விரதத்தின்போது வலுவிழந்து போனால் அதிகமாக டீ, காபி குடிப்பதற்கு பதிலாக அதிகமாகத் தண்ணீர் குடிப்பதோ அல்லது இளநீர், மோர், எலுமிச்சை சாறு போன்றவற்றைச் சாப்பிடுவது நல்லது.
- இன்சுலின் எடுத்துக்கொள்ளும் நோயாளிகள் விரதத்திற்கு ஏற்றார் போல இன்சுலின் அளவை 4% வரை குறைத்து கொள்ளலாம்.
- மருத்துவர் கூறியது போல முன் எச்சரிக்கையுடன், சரியான உணவு பழக்கத்தை கடைப்பிடித்து இந்த நவராத்திரிக்கு எந்தவொரு இடையூறும் இல்லாமல் நீங்களும் விரதம் இருக்கலாம்.