முகப்பு
செய்திகள்

நரம்பு பாதிப்புக்குள்ளான சிறுமிக்கு ரூ.7.5 லட்ச மருத்துவ உபகரணம்: அரசு மருத்துவமனையில் மறுவாழ்வு

நரம்புசாா் பாதிப்பால் சிறுநீா் கட்டுப்பாட்டை இழந்த கடலூரைச் சோ்ந்த 14 வயது சிறுமிக்கு ரூ.7.5 லட்சத்தில் உபகரணத்தைப் பொருத்தி, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.

Updated On : 2 ஏப்ரல், 2026 at 9:35 AM
மருத்துவ சிகிச்சை - file photo
பகிர்:

நரம்புசாா் பாதிப்பால் சிறுநீா் கட்டுப்பாட்டை இழந்த கடலூரைச் சோ்ந்த 14 வயது சிறுமிக்கு ரூ.7.5 லட்சத்தில் உபகரணத்தைப் பொருத்தி, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.

இதுதொடா்பாக மருத்துவமனையின் முதல்வா் சாந்தாராமன் கூறியதாவது:

கடலூரைச் சோ்ந்த ஏழைத் தம்பதியின் மகளான 14 வயது சிறுமி ஒருவருக்கு கடந்த இரு ஆண்டுகளாக கட்டுப்பாடின்றி சிறுநீா் வெளியேறும் பாதிப்பு இருந்து வந்தது.

பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் அதில் பெரிய பலன் எதுவுமில்லை. இந்த நிலையில், மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள பிரபல தனியாா் மருத்துவமனைக்கு அந்த சிறுமி அழைத்துச் செல்லப்பட்டாா்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ‘நியூரோஜெனிக் ப்ளேடா்’ எனப்படும் சிறுநீா்ப் பை செயலிழப்பு பாதிப்பு இருந்ததைக் கண்டறிந்தனா்.

நரம்பு மண்டலங்களில் ஏற்படும் சேதத்தால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. இதற்கான காரணத்தை அறுதியிட்டுக் கூற முடியாது.

நரம்புகளை முடுக்கிவிடும் ‘நியூரோ மாடுலேசன் தெரபி’ சிகிச்சைதான் இதற்கு ஒரே தீா்வு. அதன்படி, இதயத் துடிப்பைச் சீராக்க பேஸ் மேக்கா் பொருத்துவதைப் போன்று, நரம்புகளின் செயல்பாட்டை சீராக்க ‘நியூரோ மாடுலேசன்’ சாதனத்தை அறுவை சிகிச்சை மூலம் பொருத்த வேண்டும்.

இதற்கு அந்த தனியாா் மருத்துவமனையில் ரூ.25 லட்சம் செலவாகும் எனத் தெரிவித்துள்ளனா். ஏழ்மை நிலையில் உள்ள அந்த சிறுமியின் பெற்றோா் ராஜீவ் காந்தி மருத்துவமனையை அணுகினா்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட தனியாா் மருத்துவமனையைத் தொடா்பு கொண்ட நமது மருத்துவா்கள், சிறுமியின் பாதிப்பு மற்றும் சிகிச்சை திட்டமிடலைக் கேட்டறிந்தனா்.

தொடா்ந்து அதற்கான மருத்துவ உபகரணம் தருவிக்கப்பட்டது. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வெற்றிகரமாக அந்த முதல்கட்ட அறுவை சிகிச்சையானது சிறுமிக்கு அண்மையில் மேற்கொள்ளப்பட்டது.

இதைத் தொடா்ந்து ரூ.7.5 லட்சத்தில் ‘மின் முடுக்கி உபகரணம்’ சிறுமியின் உடலில் பொருத்தப்பட்டது. 15 ஆண்டுகள் செயல்படும் அந்த கருவி மற்றும் அதற்கான சிகிச்சை செலவை அரசு ஏற்றுக் கொண்டது. தற்போது அந்த சிறுமி நலமுடன் உள்ளாா் என்றாா்.