மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளுவதை தடுக்கும் சட்டத் திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளுவதை தடுக்கும் சட்டத் திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது என மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளுவதை தடுக்கும் சட்டத் திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது என மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இச்சட்டத் திருத்தங்களுக்கு ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. மனிதக் கழிவுகளை அள்ளும் மனிதர்களை அடையாளம் காண்பது தொடர்பாக மாவட்ட, மாநில, தேசிய அளவில் அமைக்கப்படும் குழுக்களில் பெண்கள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும், இதுதொடர்பாக ஆய்வு நடத்த வேண்டும் உள்ளிட்ட திருத்தங்கள் சட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.
Advertisement
கடந்த 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இம்மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இம்மசோதாவில் அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்ட திருத்தங்கள் சேர்க்கப்படும்.
ஊழல் செய்து சேர்க்கும் சொத்துகள் பறிமுதல்: அரசு ஊழியர்கள் ஊழல் புரிந்து சட்டவிரோதமாக சேர்த்த சொத்துகளை பறிமுதல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஊழல் புரிந்த அரசு ஊழியர்கள் மீது வழக்கு தொடருவதற்கான அனுமதியை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வழங்கவும் ஊழல் தடுப்புச் சட்டத்தில் இதுதொடர்பாக திருத்தங்கள் செய்யவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
எனினும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் தங்கள் பணிக்காலத்தின் போது நடைபெற்ற முறைகேடுகளுக்காக வழக்கை எதிர்கொள்ளத் தேவையில்லை என்ற அம்சம் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
தற்போது அரசு ஊழியர்கள் மீது வழக்கு தொடர விசாரணை செய்யும் அமைப்பு அரசிடம் அனுமதி பெற வேண்டும் என விதிமுறை உள்ளது. ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் இப்பாதுகாப்பு வழங்க முடிவெடுக்கப்பட்டது என்றார் சிதம்பரம்.