கர்நாடகத்தின் எதிர்காலத்தை சீர்குலைத்தது பாஜக: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
கர்நாடக மக்களின் எதிர்காலத்தை பாஜக சீர்குலைத்து விட்டதாக, காங்கிரஸ் கட்சியின் தேசியத் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.
கர்நாடக மக்களின் எதிர்காலத்தை பாஜக சீர்குலைத்து விட்டதாக, காங்கிரஸ் கட்சியின் தேசியத் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.
கர்நாடக மாநிலம், மண்டியாவில் புதன்கிழமை காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது:
கர்நாடகத்தில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக, ரெட்டி சகோதரர்களான ஜனார்த்தன ரெட்டி, கருணாகர ரெட்டியை பாஜக வளர்த்து விட்டது.
Advertisement
பாஜக தலைவர்கள், ஊழல் பற்றி பேசி வருகிறார்கள். மக்களவையிலும் செவ்வாய்க்கிழமை ஊழல் பற்றி பேசிய அந்தக் கட்சித் தலைவர்கள், முதல்வர் பதவி வகித்தவர் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் சிறைக்குச் சென்றது குறித்தும், ரெட்டி சகோதரர்களிடம் மாநிலத்தின் வளர்ச்சியை அடமானம் வைத்தது பற்றியும் பேச மாட்டார்கள்.
ரெட்டி சகோதரர்களை வளர்த்துவிட்டு, அதன் மூலம் பணத்தைப் பெற்றுக் கொண்ட பாஜகவினர் நாடெங்கும் சென்று ஊழல் குறித்து பேசி வருகிறார்கள்.
ஒரு காலத்தில் கர்நாடகம் ஒளிமயமான மாநிலமாக விளங்கியது. நாட்டின் முன்னோடி மாநிலமாகவும் இருந்தது. ஆனால், காங்கிரஸ் ஆட்சி நடைபெறாத கடந்த 9 ஆண்டுகளில், கர்நாடகத்தின் முன்னேற்றம் முடங்கியுள்ளது.
கர்நாடக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக ஊழல் குற்றச்சாட்டில் முதல்வர் பதவியை இழந்த ஒருவர் (எடியூரப்பா) சிறைக்குச் சென்று திரும்பியுள்ளார்.
கர்நாடக மக்களின் எதிர்காலத்தைக் கொள்ளைக் கும்பலிடம் பாஜக அடமானம் வைத்துவிட்டது. கர்நாடகத்தில் ஏராளமான இயற்கைவளம் குவிந்து கிடக்கிறது. குறிப்பாக, இரும்புத் தாது கர்நாடகத்தில் கொட்டிக் கிடக்கிறது. இந்த வளம் குறிப்பிட்ட தனி நபருக்கு சொந்தமானதல்ல.
இந்த வளம் கர்நாடக மக்கள் அனைவருக்கும் சொந்தமானது. இந்த மாநிலத்தின் இளைஞர்களின் மேம்பாட்டுக்கு இயற்கை வளத்தைப் பயன்படுத்தியிருக்க வேண்டும்.
ஆனால், கடந்த 9 ஆண்டுகளில் இயற்கை வளங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட குடும்பத்துக்குத் தாரை வார்க்கப்பட்டது.
கர்நாடகத்தின் நலன்களை குழிதோண்டி புதைத்துள்ள பாஜக அரசை நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தூக்கியெறிய மக்கள் துணிய வேண்டும் என்றார் ராகுல் காந்தி.
கூட்டத்தில் கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, நடிகை சுமலதா அம்பரீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.