முகப்பு
இந்தியா

மத்தியில் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள்: முலாயம் சிங்

""மத்தியில் ஆட்சிபுரிவோர் மாற வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர். அந்த மாற்றத்தை மாநில கட்சிகளால் மட்டுமே தர முடியும். எனவே, அடுத்து அமையப் போகும் மத்திய அரசில் சமாஜவாதி கட்சி முக்கிய பங்காற்றும்'' என அக் கட்சித் தலைவர் முலாயம் சிங் கூறினார்.

Updated On : 12 செப்டம்பர், 2013 at 5:20 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:20 PM

""மத்தியில் ஆட்சிபுரிவோர் மாற வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர். அந்த மாற்றத்தை மாநில கட்சிகளால் மட்டுமே தர முடியும். எனவே, அடுத்து அமையப் போகும் மத்திய அரசில் சமாஜவாதி கட்சி முக்கிய பங்காற்றும்'' என அக் கட்சித் தலைவர் முலாயம் சிங் கூறினார்.

அந்தக் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் ஆக்ராவில் புதன்கிழமை துவங்கியது. இரண்டு நாள்கள் நடைபெறும் அக்கூட்டத்துக்கு தலைமை வகித்து, அவர் பேசியது:

எல்லையில் பாகிஸ்தான், சீனா, மியான்மர் நாடுகளின் ராணுவம் அத்துமீறி நுழைகிறது.

Advertisement

ஆனால், அந்த அத்துமீறலுக்கு தக்க பதிலடி கொடுக்காமல், மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது.

இதனால் நாட்டின் நிலப்பரப்பு அந்நிய நாடுகளின் ஆக்கிரமிப்புக்குள்ளாகும் சூழல் உருவாகியுள்ளது. அதுகுறித்து மத்திய அரசோ, பிரதமரோ கவலைப்படுவதாகத் தெரிவில்லை. எல்லையில் ராணுவ வீரர்கள் கொல்லப்படுகின்றனர். அதற்கும் கடுமையான கண்டனத்தை பதிவு செய்ய மத்திய அரசு தவறிவிட்டது.

வரலாற்றில் இல்லாத வகையில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது. இதை சீராக்க வேண்டிய மத்திய அரசு, பிற நாட்டு பணத்தின் ஏற்ற இறக்கத்தால் ரூபாயின் மதிப்பு சரிந்தது என விளக்கம் அளிக்கிறது.

தற்போதைய மோசமான சூழலை சீராக்க மத்திய அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதே நிலை நீடித்தால், நாட்டின் நிலை மேலும் மோசமாகிவிடும்.

ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை. சிறிய விவசாயிகளின் விளைபொருள்களுக்கு போதுமான விலை கிடைப்பதில்லை.

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் அத்தியாவசியப் பொருள்களின் விலை 100 சதவீதம் உயர்ந்துள்ளது.

விலைவாசி உயர்வுக்கும், நாட்டில் நடைபெற்ற ஊழல்களுக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது.

நியாயமாக மக்களுக்குச் சென்றடைய வேண்டிய பணம் முழுவதும் ஊழல்கள் காரணமாக தனியாரிடம் செல்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் மட்டும் ரூ. 5 லட்சம் கோடி அளவிற்கு ஊழல் நடைபெற்றுள்ளது.

தேசிய கட்சிகள் அனைத்தும் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுவதால், அந்தக் கட்சிகளை நம்ப மக்கள் தயாராக இல்லை. தற்போதைய சூழலில் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். அந்த மாற்றத்தை மாநில கட்சிகளால் மட்டுமே தர முடியும். எனவே, அடுத்து அமையப் போகும் மத்திய அரசில் சமாஜவாதி கட்சி முக்கிய பங்காற்றும்.

முசாஃபர்நகர் நடைபெற்ற வகுப்பு கலவரத்தைப் பயன்படுத்தி, அரசியல் ஆதாயம் தேட சில அரசியல் கட்சிகள் முயல்கின்றன. ஆனால், அத்தகைய அரசியல் கட்சிகளை மக்கள் தயாராக இல்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.