இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் நாளை பேச்சுவார்த்தை
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் சர்தாஜ் அஜீஸ் ஆகியோர் கிர்கிஸ்தானில் வெள்ளிக்கிழமை சந்தித்து பேச உள்ளனர்.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் சர்தாஜ் அஜீஸ் ஆகியோர் கிர்கிஸ்தானில் வெள்ளிக்கிழமை சந்தித்து பேச உள்ளனர்.
அப்போது, இரு நாட்டுப் பிரதமர்களும் நியூயார்க்கில் நடைபெறும் ஐநா சபை கூட்டத்தின்போது பேச்சுவார்த்தை நடத்துவது பற்றி அவர்கள் திட்டமிட உள்ளனர்.
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அண்மைக் காலமாக இரு நாட்டு வீரர்களும் மோதிக் கொண்டதால் பதற்றம் ஏற்பட்டது. இது போன்ற சம்பவங்களைத் தடுக்க பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் விருப்பம் தெரிவித்துள்ளார்.
Advertisement
அவரது உத்தரவுப்படி பாகிஸ்தான் தூதர் சல்மான் பஷீர் தில்லியில் உள்ள பிரதமர் அலுவலகம் வந்து, இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் கிர்கிஸ்தானில் பேச்சுவார்த்தை நடத்துமாறு வேண்டுகோள் விடுத்தார். இதற்கு பிரதமர் மன்மோகன் சிங்கும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் வெள்ளிக்கிழமை ஷாங்காய் கூட்டுறவு அமைப்புக் கூட்டத்தில் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
அப்போது அவர்கள் தனியாக சந்தித்து, நியூயார்க்கில் நடைபெறும் ஐநா சபைக் கூட்டத்தில் பங்கேற்óகும் இந்திய மற்றும் பாகிஸ்தான் பிரதமர்கள் சமரசப் பேச்சுவார்த்தை நடத்துவது பற்றி திட்டமிடுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, பாகிஸ்தான் தூதர் சல்மான் பஷீர் செவ்வாய்க்கிழமை இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.