நான் நிரபராதி: பவன்குமார் பன்சால்
தான் நிரபராதி என்றும் ஊழல் வழக்கினால் ஒரு பயனும் இருக்காது என்றும் முன்னாள் ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் கூறியுள்ளார்.
தான் நிரபராதி என்றும் ஊழல் வழக்கினால் ஒரு பயனும் இருக்காது என்றும் முன்னாள் ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் கூறியுள்ளார்.
ரயில்வே வாரிய உறுப்பினர் நியமன ஊழல் விவகாரத்தை தொடர்ந்து அமைச்சர் பதவியைவிட்டு விலகிய பன்சால் தனது சொந்த ஊரான சண்டீகர் திரும்பியிருக்கிறார். வீட்டில் அவரை சந்திக்க வந்த உள்ளூர் தலைவர்களிடையே ஞாயிற்றுக்கிழமை அவர் பேசினார். அங்கு செய்தியாளர்களும் இருந்தனர். அவர் பேசியது:
ரயில்வே வாரிய முறைகேடு விவகாரம் தொடர்பான வழக்குக்கும் எனக்கும் தொடர்பில்லை. இந்த வழக்கினால் எந்த பலனும் இருக்கப் போவதில்லை. இந்த விவகாரத்தில் நான் நிரபராதி என்றுதான் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
Advertisement
Advertisement
இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணையை நான் வரவேற்கிறேன். சிபிஐ விசாரணையில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் இந்த வழக்கினால் எந்தப் பலனும் இருக்கப் போவதில்லை என்றார்.
உங்கள் உறவினர்கள் இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளதே என செய்தியாளர்கள் கேட்டனர்.
உறவினர்கள் என்றால் என்ன என்று ஒவ்வொரு செய்தியாளருக்கும் தனித் தனியாக நான் விளக்கம் கூற வேண்டியிருக்கும் என்று நினைக்கிறேன் என்றார்.
ரயில்வே வாரிய உறுப்பினர் பதவி நியமனம் தொடர்பாக அவருடைய சகோதரி மகன் விஜய் சிங்லா ரூ. 90 லட்சம் வாங்கிய விவகாரம் வெளியாகிய பின் பன்சால் தனது சொந்த ஊர் வருவது இதுவே முதல் முறை.
சனிக்கிழமை இரவு சண்டீகர் வந்து சேர்ந்தார். சிவப்பு விளக்கு பொருத்தாத கார் ஒன்றில் தனது மனைவி, இரு மகன்களுடன் அவர் புது தில்லியிலிருந்து பயணம் செய்தார். அடுத்த ஆண்டு மக்களவைக்கு தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் சொந்த ஊரில் தனக்கு இன்னும் செல்வாக்கு இருப்பதைக் காட்டவே இது போன்ற ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தார் என கூறப்படுகிறது.