தில்லி கிரிக்கெட் சங்க விவகராத்தில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மீது குற்றம் சுமத்திய தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என பாரதீய ஜனதா கட்சி வலியுறுத்தியது.
இதற்கு பதிலளித்த ஆம் ஆத்மி, ஜேட்லி ஏன் விசாரணையை கண்டு ஓடுகிறார் என கேள்வி எழுப்பியுள்ளது.
தில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் செய்தி தொடர்பாளர் எம்.ஜே.அக்பர், தில்லி அரசு அமைத்த விசாரணை அறிக்கையில் எந்த இடத்திலேயும் ஜேட்லியின் பெயர் குறிப்பிடப்படவில்லை. மேலும், தில்லி கிரிக்கெட் சங்கத்தில் எவ்வித முறைகேடும் நடக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, ஜேட்லி மீது குற்றம் சுமத்திய தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றார்.
மேலும், தில்லி நீதிமன்றத்தில் ஜேட்லி தொடுத்துள்ள அவதூறு வழக்கில் ஆஜாராகி தனது தவறை கேஜரிவால் ஒத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
தில்லியை ஆட்சி செய்த முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் சதியின் பேரில் தில்லி கிரிக்கெட் சங்கத்தில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து, தீவிர முறைகேடு குறித்த குற்றங்களை விசாரிக்கும் அமைப்பு விசாரணை நடத்தியது. இதன் விசாரணை முடிவில் எவ்வித முறைகேடுகளும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றார் அக்பர்.
இதற்கு பதிலளித்துள்ள ஆம் ஆத்மி கட்சி, தில்லி அரசு தற்போது அமைத்துள்ள விசாரணை ஆணையத்தை எதிர்கொள்ள ஜேட்லி ஏன் பயப்படுகிறார் என கேள்வி எழுப்பியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கூறியபடி, ஜேட்லி, அத்வானியைப் பின்பற்றி தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் ஆம் ஆத்மி தலைவர் அசுதோஷ் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.