பிகார் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிதீஷ்குமார் முதல்வராக பதவியேற்கும் விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
எதிர்கட்சிகள் அனைத்தும் ஒரணியில் இயங்குவதற்கான தொடக்கப் புள்ளியாக இந்நிகழ்வு இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
ஐந்துகட்டமாக நடைபெற்ற பிகார் பேரவைத் தேர்தலில் நிதீஷ், லாலு, காங்கிரஸ் கூட்டணி 178 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து கூட்டணி சார்பில் நிதீஷ்குமார் வரும் 20 ஆம் தேதி பதவியேற்கிறார்.
இந்நிகழ்சியில் ஆளும் பாரதீய ஜனதாவ எதிர்க்கும் அனைத்து கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது.
ராஷ்டீரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத், ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவர் ஆகியோர் முக்கிய விருந்தினராக கலந்து கொள்கின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல்காந்தி, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக், அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகாய் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்.
மேலும், முன்னாள் பிரதமர் தேவே கௌட, ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டி ஆகியோரும் விழாவில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.
பாரதீய ஜனதா கட்சியை எதிர்க்கும் அனைத்து கட்சிகளின் தலைவர்களையும் இந்த பதவியேற்பு விழாவுக்கு அழைக்க முடிவு செய்துள்ளதாக ஐக்கிய ஜனதா தள ஊடக தொடர்பாளர் அஜய் அலோக் கூறினார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்துள்ள பாஜகவை எதிர்த்து அனைத்து எதிர்கட்சிகளும் தற்போது ஒன்றாக அணி வகுத்திருப்பது, இந்திய அரசியலில் ஒரு புதிய தொடக்கமாக கருதப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.