சல்மான் ருஷ்டி நாவல் தடை குறித்த சிதம்பரத்தின் பேச்சு: சொந்த கருத்து என காங்கிரஸ் விளக்கம்
சல்மான் ருஷ்டி எழுதிய "சாத்தானின் கவிதைகள்' நாவலுக்கு ராஜீவ் அரசு தடைவிதித்தது தவறு என ப.சிதம்பரம் கூறியது அவரது சொந்த கருத்து என காங்கிரஸ் கட்சி விளக்கம்
சல்மான் ருஷ்டி எழுதிய "சாத்தானின் கவிதைகள்' நாவலுக்கு ராஜீவ் அரசு தடைவிதித்தது தவறு என ப.சிதம்பரம் கூறியது அவரது சொந்த கருத்து என காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது.
சல்மான் ருஷ்டி எழுதிய "சாத்தானின் கவிதைகள்' நாவலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவருக்கு எதிராக ஈரானிய நாட்டு மதத் தலைவர் அயதுல்லா கொமேனி கடந்த 1988ஆம் ஆண்டு ஃபத்வா (தடை) உத்தரவைப் பிறப்பித்தார். இதையடுத்து, சல்மான் ருஷ்டியின் நாவலுக்கு இந்தியாவில் அப்போது ஆட்சியிலிருந்த ராஜீவ் காந்தியின் அரசு தடை விதித்தது.
இந்நிலையில், தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆங்கில நாளேடு ஒன்றின் நிகழ்ச்சியில் ப. சிதம்பரம் பேசுகையில், "சல்மான் ருஷ்டியின் புத்தகத்துக்கு ராஜீவ் காந்தி அரசு தடை விதித்தது தவறு; இதைச் சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் கிடையாது' என்றார்.
Advertisement
அப்போது, ராஜீவ் அமைச்சரவையில் மத்திய உள்துறை இணையமைச்சராக ப. சிதம்பரம் பதவி வகித்தார்.
சிதம்பரத்தின் கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ள நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் கமல்நாத், அது சிதம்பரத்தின் சொந்த கருத்து என்றார். காங்கிரஸ் கட்சிக்கு இதில் உடன்பாடில்லை என்றார்.
மேலும் எந்த தனிநபரும் ஒரு பிரச்னையில் கட்சியின் நிலைபாட்டை சீர்குலைக்க முடியாது என்றார்.