மதுராந்தகம் அருகே ஆசிரியரின் பாலியல் தொல்லையால் பள்ளி மாணவி தற்கொலை
மதுராந்தகம் அடுத்த செய்யூரில் பள்ளி ஆசிரியரின் பாலியல் கொடுமையால், மாணவி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுராந்தகம் அடுத்த செய்யூரில் பள்ளி ஆசிரியரின் பாலியல் கொடுமையால், மாணவி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்யூர் தாலுக்கா, தேவனூர் கிராமத்தை சேர்ந்தவர் கஜேந்திரன். விவசாயியியான அவரது மகள் கௌசல்யா (வயது 17). இவர் செய்யூரில் உள்ள லிட்டில்பிளவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். வழக்கம் போல புதன்கிழமை பள்ளிக்குச் சென்ற கௌசல்யாவை அப்பள்ளியில் உயிரியல் பாட ஆசிரியராக பணியாற்றி வரும் வடக்கு செய்யூர் காலனியை சேர்ந்த ரமேஷ் (வயது 37) மாலையில் தனது வீட்டுக்கு வந்து செல்லுமாறு கூறியுள்ளார். மாலையில் ஆசிரியர் ரமேஷின் வீட்டுக்கு கௌசல்யா சென்றார். அங்கு வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தனியாக இருந்த ரமேஷ் கௌசல்யாவை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அழுதுக் கொண்டே வெளியே வந்த கௌசல்யாவை இதுப்பற்றி யாருக்கும் சொல்லாதே. அது உன் குடும்பத்துக்கு அசிங்கம் என மிரட்டி ஆசிரியர் ரமேஷ் மிரட்டி அனுப்பியுள்ளார்.
இதனால் மனவேதனை அடைந்த கௌசல்யா வியாழக்கிழமை காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு, தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Advertisement
வீட்டுக்கு வந்த கஜேந்திரன் தனது மகள் தூக்கிலிட்டு இறந்து போனதை அறிந்து, இதுப்பற்றி தனது உறவினர்களுக்கும், செய்யூர் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தார். அவரது உடல் அருகே கடிதத்தை கண்ட அவரது உறவினர்கள் கௌசல்யா சாவுக்கு ஆசிரியர் ரமேஷ் காரணமானதால், அவரை கைது செய்து அவரை எங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி, சித்தாமூர்-செய்யூர் நெடுஞ்சாலையில் நல்லூர் கூட்ரோடில் இறந்து போன கௌசல்யாவின் உடலை வைத்து சுமார் 300க்கும் மேற்பட்ட உறவினர்களும் பொதுமக்களும், பள்ளி மாணவ மாணவிகளும் சாலை மறியல் செய்தனர். இத்தகவலை அறிந்த மதுராந்தகம் டி.எஸ்.பி சிவசங்கரன் தலைமையில் காவல்துறையினர் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர். இதனால் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செய்யூர் காவல்துறை ஆய்வாளர் குமரன் இறந்து போன மாணவி கௌசல்யாவின் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். செய்யூர் காவல்துறையினர் பாலியல் கொடுமை செய்த ஆசிரியர் ரமேஷை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.