மெஹபூபா முஃப்தி பதவியேற்பு விழாவில் வெங்கைய்யா நாயுடு, ஜிதேந்திர சிங் பங்கேற்பு
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முதல் பெண் முதல்வராக மெஹபூபா முஃப்தி வரும் திங்கள் அன்று பதவியேற்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் வெங்கைய்யா நாயுடு, ஜிதேந்திர சிங் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முதல் பெண் முதல்வராக மெஹபூபா முஃப்தி வரும் திங்கள் அன்று (ஏப்ரல் 4) பதவியேற்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் வெங்கைய்யா நாயுடு, ஜிதேந்திர சிங் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
பிடிபி கட்சியின் நிறுவனர் முஃப்தி முகமது சயீது மாநிலத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் அவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து புதிய அரசு அமைவதில் சிக்கல் எழுந்தது.
இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் பிடிபி தலைவர் மெஹபூபா முஃப்தி அண்மையில் சந்தித்துப் பேசினார். அப்போது ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியமைக்கும் விவகாரத்தில் உடன்பாடு எட்டப்பட்டது.
Advertisement
இதையடுத்து மாநில சட்டப்பேரவை பிடிபி கட்சித் தலைவராக மெஹபூபா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் முதல்வராவதற்கு பாஜகவும் ஆதரவளித்தது. இந்நிலையில், மெஹபூபா வரும் 4-ம் தேதி முதல்வராகப் பதவியேற்க உள்ளார்.
ஜம்முவில் உள்ள ராஜ் பவனில் வரும் திங்கட்கிழமை காலை 11 மணியளவில் மாநில ஆளுநர் என்.என். வோரா பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர்கள் வெங்கய்யா நாயுடு, ஜிதேந்திரா சிங் உள்ளிட்டவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.